
தமிழ்ச்சினிமாவில் நாலைந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் பேசினால் வம்பு இல்லாமல் இருக்காது.
அதிலும் தயாரிப்பாளர் கே.ராஜன் எவரையாவது சீண்டாமல் பேசமாட்டார். சிறு ,குறு படத்தயாரிப்பாளர்களுக்காக வாய்ஸ் கொடுப்பார். ரஜினி ,கமல் ,விஜய் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை .விளாசிவிடுவார்.பெருந்தலைவர் காமராஜரின் பக்தர்.
அண்மையில் நானும் சிங்கிள்தான் என்கிற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கே.ராஜன் பேசினார்.
புன்னகை பூ கீதா தயாரிக்கும் புதிய படம்தான் “ நானும் சிங்கிள் தான் “.
அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாகவும், தீப்தி திவேஸ் கதாநாயகியாகவும் நடிக்க,இவர்களுடன், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, செல்வேந்திரன் ,கதிர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளவர் ஆர்.கோபி .
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார் ,
“இப்படத்தின் டீசரை பார்க்கும் போது இயக்குநர் கோபிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தெரிகிறது. .முயற்சியும் உழைப்பும் இருந்தால் சரியான வாய்ப்பு வந்தே தீரும். இயக்குனர் கோபி இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இப் படத்தை இயக்கியுள்ளார். இன்று எவ்வளவோ படங்கள் எடுத்த ஒரு நிறுவனம் ஒரு படம் கூட எடுக்க முடியாமல் இருக்கிறது. காரணம் ஒரு இயக்குநர்.
தயாரிப்பாளர் புன்னகை பூ கீதா சிறப்பாக இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார். ராம.நாராயணன் படம் எடுக்கும் போது படத்தின் நாயகனை நம்ப மாட்டார். நாய், கழுதை போன்ற மிருகங்களை நம்புவார்.
இயக்குனர் கோபி தயாரிப்பாளர்களை காப்பாற்றும் வேலையைச் செய்யவேண்டும். நானும் சிங்கிள் தான் படத்தில் அத்தனை பேரின் உழைப்பும் அருமையாக இருக்கிறது.
விஜய் படத்திற்கு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கொடுத்தார்கள். திடீரென்று மறுத்து விட்டார்கள். இப்போது அந்தப்படம் ஓடிடி தளத்துக்கு வந்த பிறகு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். அதில் என்ன அரசியலோ தெரியல. நமக்கு அது தேவையில்லை.
அரசு கொரோனா விஷயத்தில் நன்றாக நடந்து கொண்டது. அதேபோல் 8 சதவீத வரியை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும் “என்று ராஜன் பேசினார்.












