
நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’.
இன்டே ரெபெல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
காதல், நட்பு, காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் டி .ஜி.தியாகராஜன் பேசியதாவது…
“கோவிட் நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது. பட்டாசு திரைப்படத்திற்கு பிறகு, இப்போது மீண்டும் உங்கள் அனைவரையும் பார்ப்பது மகிழ்ச்சி. ஆதி படங்களை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ‘நட்பே துணை’ படத்தை பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் துணை கதாப்பத்திரங்களுக்கு கூட நிறைய வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தின் கதையை எனது மகன் தான் முழுதாக கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் முழுதாக முடிந்த பிறகு பார்த்தேன் இரண்டாம் பகுதி என்னை மிகவும் பாதித்தது. ஆதியை மனமார பாராட்டினேன். மூன்றாம் பிறை படத்திற்கு பிறகு இந்தப்படம் தான் என்னை அதிகம் பாதித்தது.
இந்த படத்தில் தாத்தாவாக வரும் குமணன் அட்டகாசமாக செய்துள்ளார். நெகட்டிவாக வரும் விஜய் கார்த்திக் மிக அழகாக செய்துள்ளார். நடிகர் கதிரின் காமடி நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவை, கொடுத்த பட்ஜெட்டில் அற்புதமாக செய்துள்ளார்.
ஆதியின் படத்தில் வரும் நாயகிகள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள் அது போல் மாதுரி ஜெயின் பெரிய அளவில் வெற்றி பெறுவார்.கொரானாவினால் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல படங்கள் தியேட்டரில் பார்த்தால் தான், நாம் அதை ரசிக்க முடியும். அதனால் தான் காத்திருந்து இப்படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம். உங்கள் முழு ஆதரவை தாருங்கள் நன்றி.”என்று கேட்டுக்கொண்டார்
நடிகர், இயக்குநர் ஆதி பேசியதாவது..
“நிறைய பேருக்கு இது முதல் மேடை, அவர்கள் உணர்ச்சிகரமாக பேசியது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். அவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யஜோதி மிகப்பிரமாண்டமாக “அன்பறிவு” படத்தை எடுத்தார்கள். பொதுமுடக்கத்தால் அது கொஞ்சம் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் புடவை வாங்க காஞ்சிபுரம் போயிருந்தேன், அங்கு கிடைத்த அனுபவத்தால் தான் இந்தக்கதையை எழுதினேன்.
இந்தப்படம் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. என் தயாரிப்பாளர் ரிஸ்க் வேண்டாம் என்றார். ஆனால் என் நடிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை எடுக்க ஆரம்பித்தோம். இந்தப்படத்திற்கு புதுமுகங்கள் தான் சரியாக இருப்பார்கள் என்று தோன்றியது.
இந்தப்படம் வெற்றியடையும்போது இந்த நடிகர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வார்கள். இரண்டே லென்ஸில் படத்தை ஒளிப்பதிவு செய்த அர்ஜூன்ராஜாவுக்கு நன்றி. கோல்ட் மெடல் வாங்கிய படத்தொகுப்பாளர் தீபக் துவாரகநாத் அட்டகாசமாக செய்துள்ளார். இந்தப்படத்தில் ஆர்ட் மிக முக்கியமானது அதை அட்டகாசமாக செய்து தந்த வாசு தேவனுக்கு நன்றி. தமிழ் தெரிந்த ஹீரோயின், அவர் பாண்டிச்சேரி தமிழ்ப்பெண் ஒரு மாதம் எங்களுடன் இணைந்து ரிகர்சல் செய்தார். திரையில் இப்போது அதை பார்க்க நன்றாக இருக்கிறது. இந்தப்படம் தியேட்டரில் அமர்ந்து பார்க்க வேண்டிய படம். நான் கேட்டுக்கொண்டதை மதித்து, திரையரங்கில் படத்தை கொண்டுவந்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணம் தான் இப்படம். எல்லோருக்கும் பிடிக்கும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.”என்றார் .
ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைப்பதோடு, கோ சேசாவுடன் இணைந்து பாடல்கள் எழுதியுள்ளார். அர்ஜூன்ராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் குமார் ஆக்சன் காட்சிகள் அமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகள் வெளியாகிறது.












