
கேளா காதினரிடம் எவ்வளவுதான் உரத்து முறையிட்டாலும் சிரித்தபடியே கடந்து சென்றுவிடுவார்கள்.
அது ஒன்றிய அரசின் தலைமைக்கும் பொருந்தும்.!
சுதா சந்திரன். சிறந்த பரதநாட்டிய கலைஞர். இவர் தனது இன்ஸ்ட்ராகிராம் வீடியோ வழியாக பிரதமர் மோடிக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றினை கொடுத்திருக்கிறார். அதாவது கோரிக்கை.முக்கியமானதுதான்!
இவர் ஒரு விபத்தில் தனது காலினை இழந்து விட்டவர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு படியுங்கள்.
இளம் வயதில் கால் இழந்தவர் .பரதக்கலை மீதுள்ள காதலினால் பிராஸ்தடிக் லெக் -செயற்கை கால் பொருத்திக்கொண்டு ஆடிவந்தார். சீரியல் ,மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார்.,
அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்கிறவர். அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறவர்.
விமானப்பயணம் மேற்கொள்கிறபோது இவர் அனுபவிக்கிற கொடுமைகளை இனியும் தாங்க முடியாது என்கிற நிலை.
யாரிடம் முறையிடுவது? எவரிடம் சொல்லியும் தீராத கொடுமை.! பிரதமர் மோடியிடம் முறையிட்டிருக்கிறார். இங்கு மட்டும் என்ன வாழப்போகுதாம்?
சரி.. சரி ஒரு நம்பிக்கைதான்.!
“நான் விமானப் பயணம் மேற்கொள்கிறபோதெல்லாம் ஏர் போர்ட் அத்தாரிட்டியினர் எனது செயற்கை காலினை அகற்றச் சொல்லுகிறார்கள். இது மனிதாபிமானமா ?ஒரு பெண்ணால் அடிக்கடி ஆடை அகற்றி செயற்கை காலினை எடுத்துக்காட்ட முடியுமா? வேண்டுமானால் வெடிகுண்டு சோதனை கருவியை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்வதையும் அவர்கள் கேட்பதில்லை.
ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்படுகின்ற மரியாதையா இது? கருணை கூர்ந்து ஆவண செய்யுங்கள்” என்று கெஞ்சி இருக்கிறார் சுதா சந்திரன்!












