டிரிப்பர் எண்டர்டெயிண்ட்மெண்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”.
இப்படத்தில்,ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வரவேற்பைக் குவித்துள்ளது.
இப்படம் வரும் நவம்பர் 11 உலகமெங்கும் திரை இரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.படவெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் ஊடகத்தினரைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில் நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் பேசியதாவது…
இந்தப் படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையைப் பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும். அது போலவே இந்தப் படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஒன்றாக இருக்கும். இந்தப் படம் தியேட்டரில் வெளியாகிறது, இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. இந்தப் படத்தின் வெற்றி இது போன்று உள்ள படங்கள வெற்றி பெற ஆரம்பபுள்ளியாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.
நாஞ்சில் சம்பத் பேசியதாவது…
மிகவும் நுணுக்கமான கதையை அடையாளம் கண்டு, அதில் திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர். இந்தக் கதையில் அம்மாவிற்கும் மகனுக்குமான பாசத்தை அழகான திரைக்கதையாக வடிவமைத்து இருக்கிறார். வித்தியாசமான சிந்தனைகள் கொண்ட ஆட்கள் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள். அந்த வகையில் இந்தப் படமும், இந்த படக்குழுவும் கண்டிப்பாக வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் துவாரக் ராஜா பேசியதாவது…
இந்தப் படத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து எனக்கு முழு சுதந்திரம் கிடைத்தது. அவர் என்னை முழுமையாக நம்பினார். இந்தப் படம் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தைப் பற்றிய கதை இது. அனைத்து நடிகர்களும் முழு அர்பணிப்புடன் நடித்துக் கொடுத்தனர். இந்தப் படத்தின் கதைக்களத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்சனையை, பெண்கள் தீர்ப்பதாய் இருக்கும். இந்தப் படத்தில் நடித்த பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளை சிறப்பாகக் கடத்தியுள்ளனர். இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி என்றார்.
நடிகர் லிங்கா பேசியதாவது…
தயாரிப்பாளர் மது அவர்களுக்கு சினிமா மீது அதிகமான காதலும், அர்ப்பணிப்பும் இருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும். நாங்கள் இதை வித்தியாசமான பாணியில் இருக்குமாறு தான் உருவாக்கியுள்ளோம். இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி என்றார்.
நடிகை கல்பிக்கா பேசியதாவது….
என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. நாங்கள் அனைவரும் ஒன்றாகப் படத்தைப் பார்த்தோம். படத்தைப் பார்த்த பிறகு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். படக்குழுவில் உள்ள அனைவரும் என்னை வீட்டில் இருப்பதைப் போல் பார்த்துக் கொண்டனர். படம் பார்த்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். நன்றி என்றார்.
இசையமைப்பாளர் ராஜ்குமார் அமல் பேசியதாவது..
என்னைப் போன்ற ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது ஒரு கனவுப் படம். இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம். எனது திறமையை வெளிக்காட்ட எனக்கு இதில் நிறைய ஸ்கோப் இருந்தது. நவம்பர் 11க்கு பிறகு இந்தப் படம் அனைவருக்கும் சொந்தமானது. அனைவரும் தியேட்டரில் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் மேக் மணி பேசியதாவது…..
நானும் இயக்குநர் துவாரக் ராஜாவும் குறும்படங்களில் இருந்தே நண்பர்கள். பரோல் திரைப்படம் எங்கள் குழுவின் கூட்டு முயற்சி. பார்வையாளர்கள் எங்கள் முயற்சிகளை அங்கீகரித்துப் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை அனைவரும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.