
நெஞ்சிலும் முதுகிலும் வாங்கிய குருதி சிந்திய குத்துகள் போர் வீரனை ஊக்குவிக்கும் உணர்வுகளாக மாறுமே தவிர கோழையாக விழச்செய்து விடாது.
லத்தி (சார்ஜ்.)திரைப்படத்தில் விஷாலிடம் அந்த உணர்வினையே பார்க்க முடிந்தது.ஏறத்தாழ கதையின் கருத்தும் அதுவாகவே அமைந்திருக்கிறது.
இது ஒரு போலீஸ் படம். ஐபிஎஸ் அதிகாரிகளையே கதாநாயகர்கள் வரித்துக்கொள்ளும் இந்த காலக்கட்டத்தில் விஷால் மிகவும் சாதாரணமான போலீஸ்காரர் வேடத்தை ஏற்றிருக்கிறார் .அதுவும் சஸ்பெண்டான நிலையில் நமக்கு அறிமுகமாகிறார்.
ஏன் சஸ்பெண்ட், மறுபடியும் பணியில் இணைந்தபிறகு ஏற்படும் துயரம் என்ன ,வில்லன் ரமணா இவரை இலக்கு வைத்து தாக்குவதற்கான காரணம் என்ன,இவைகளை விரிவாக்குவதுதான் லத்தி கதை.
எழுதி இயக்கியிருக்கிற வினோத்குமார் கதையாக சொல்லுவதில் வல்லவர் போலும். திரையில் அதை விரிவாக்கியபோதுதான் திணறியிருக்கிறார்.லாஜிக் நெருடல்.!
கதையின் பலமே விஷால்தான்.! மனைவி சுனைனாவிடம் கெஞ்சுவது ,கொஞ்சுவதில் குறையில்லை. தேனீக்களாக வருகிற வில்லன்களை துவைத்து எடுப்பது, கண் கிழிந்து ( இமை.)உடல் சிதைந்து தேகமே ரத்தக்களரியானாலும் துணிவு குறையாமல் சண்டையிடும் விஷால் திரைக்குப்புதுமை. சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பெருங் கொடூரன் !
சுனைனாவை அழகாக பார்க்க முடிகிறது.குடும்பப்பெண் குத்து விளக்கு.!
சிறுவன் லிரில் ராகுவையும் இயக்குனர் விடவில்லை. அச்சம் கூடாது என்பதற்காக சிறுவனை புரட்டி எடுத்திருக்கிறார்கள்.அச்சம் இல்லாமல் நடித்திருக்கிறான் .
வில்லனாக வரும் மலையாள நடிகர் சன்னி.உருவத்துக்கேற்ற பயங்கர தோற்றம் இல்லை. அடியாளாக வரும் வினோத்சாகர், முரட்டு வில்லனாக வரும் ரமணா ஆகியோர் பொருத்தம்.
பிரபு, தலைவாசல் விஜய், முனீஷ்காந்த்,இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் காவல் அதிகாரிகளாக வருகிறார்கள். முனீஸ்காந்த் காவல் நிலையத்தில் கணக்கு எடுத்த காட்சிக்கு விளக்கமே இல்லை.
பாலசுப்பிரமணியெம், பாலகிருஷ்ணா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகள் மிரட்டலாக அமைந்திருக்கின்றன.
யுவனின் . பின்னணி இசை கதைக்குப் பலம் சேர்க்கிறது.
எவ்வித அதிகாரமும் இல்லாத எல்லோருக்கும் அடிபணியக் கூடிய காவலர், சென்னையிலுள்ள மொத்த ரவுடிகளையும் திட்டமிட்டு அழிக்கிறார் என்கிற பெரியகதை..
பிற்பாதியில் வரும் சண்டைக்காட்சிகள் அவற்றில் விஷாலின் உழைப்பு ஆகியன பிரமிக்க வைக்கின்றன.
நேர்மையான காவல்துறையினரைப் பெருமைப்படுத்தும் படம்.












