தமிழகத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து வந்த விஜயகாந்த் இன்று மறைந்து விட்டதாக காலை 8.45 மணி அளவில் செய்தி வெளியாகியது. ஆனால் அதிகாலை 5 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக அதிகார பூர்வமற்ற தகவல் உலவுகிறது.
கேப்டன் என்று பாசமுடன் அழைக்கப்பட்ட விஜயகாந்த் இல்லத்தின் முன்பாகவும்,தேமுதிக அலுவலகம் முன்பாகவும் போலீஸ் குவிக்கப்பட்டதுமே முக்கிய பிரமுகர்கள் விபரீதமான செய்தி வரலாம் என்பதை ஊகித்துவிட்டனர். கேப்டனின் வீடு இருக்கும் சாலிகிராமம் பகுதி மக்களால் சூழப்பட்டுவிட்டது.
அவருக்கு வயது (71). .
கேப்டனின் மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் , மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயராஜ் என்று அழைக்கபட்டவர் திரை உலக பிரவேசத்துக்குப் பிறகு விஜயகாந்த் என பெயர் மாற்றம் பெற்றார். இவரது தந்தை அழகிரிசாமி நாயுடு மதுரை மாநகராட்சி மன்ற உறுப்பினராக தேர்வு பெற்றிருந்தார் . பழ . நெடுமாறனின் தீவிர ஆதரவாளர்.
உடல் நலக்குறைவால் கேப்டன் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அடிக்கடி மருத்துவமனை சென்று வந்தார். அவரால் சரளமாக பேச இயலாது போய்விட்டது. நண்பர்களையும் அடையாளம் காண முடியவில்லை..
திரை உலகத்தில் இவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் ராதா ரவி,வாகை சந்திர சேகர், பாண்டியன் ,ஒருமையில் பேசிக்கொள்வார்கள். மாலை நேரத்தில் இவர்களை நடிகர் சங்கத்தில் பார்க்க முடியும்.
இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு . க. ஸ்டாலின் “முழு அரசு மரியாதை செலுத்தப்படும் “என்று அறிவித்திருக்கிறார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கேப்டன் தொடங்கியதும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது . சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தபோது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை எப்படி எதிர்கொள்வாரோ என்று சில கட்சித்தலைவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஜெயலலிதாவை தைரியமுடன் விமர்சித்துப் பேசி அந்த கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்தார்.
இதன்விளைவாக தேமுதிக சார்பில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலரை பிற்காலத்தில் ஜெயலலிதா அதிகாரத்தை பயன்படுத்தி தனது கட்சியில் இணைத்துக்கொண்டார். அவர்களில் முக்கியமானவர்கள் ம. பா . பாண்டியராஜன் ,நடிகர் அருண்பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
ஆனாலும் கட்சியை வலிமையுடன் கொண்டு சென்றார். தமிழகத்தின் உரிமைகளுக்காக நடிக நடிகையரை சேர்த்துக்கொண்டு போராடியவர் விஜயகாந்த் . நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார்.. ஒன்றுபட்ட சங்கமாக திகழ்ந்தது.












