தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடும் தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தில் தமன்குமார், எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே.ஜி. ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.
இம்மாத இறுதியில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளரும், பிக் பாஸ் பிரபலமுமான ஆரி அர்ஜுனன், தயாரிப்பாளரும், இயக்குநருமான சி. வி. குமார், நடிகரும், பேச்சாளருமான ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் இவர்களுடன் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் கலந்து கொண்டனர்.
படத்தின் இயக்குநர் மணிவர்மன் பேசுகையில், ” எங்களுடைய ஒரு நொடி திரைப்படத்திற்காக பல நொடிகளை செலவு செய்து இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி
நாம் வாய்ப்புகளைத் தேடி அலையும் போது நம்மை மற்றவர்கள் பார்க்கும் பார்வை வேறாக இருக்கும். ஆனால் தயாரிப்பாளர் அழகர் என்னை நம்பி இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தின் கதையை கேரளாவில் உள்ள ஒரு இயக்குநருக்காக உருவாக்கி.. அதை முதலில் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்தீஷிடம் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்ட ரத்தீஷ், இந்த திரைப்படத்தை நாம் இணைந்து உருவாக்கலாம் என்றார். இந்த படத்திற்கு அவரும் இணை தயாரிப்பாளர்.
சின்ன பட்ஜெட் படம் என்பதால் எனக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்காமல் நான் கேட்ட விசயங்களை தயாரிப்பாளர் தாராள மனதுடன் வழங்கினர். மதுரையில் படப்பிடிப்பு தளத்தில் பல சிரமங்களுக்கு இடையே முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி படத்தின் படப்பிடிப்பிற்கு உதவினார்.
படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகளைத் தொடங்கிய போது ஒரு வேடத்திற்காக டப்பிங் பேச கேபிள் சங்கரை அழைத்தேன். அவர் இப்படத்தினை பார்த்து சிலாகித்து பாராட்டினார். அத்துடன் இல்லாமல் தமிழ் சினிமாவின் முக்கிய முகமாக அறியப்படும் தனஞ்ஜெயனை அழைத்து வந்து படத்தை காண்பித்தார். இன்றைக்கு இந்த திரைப்படம் இந்த அளவிற்கு மக்களை சென்றடைந்திருக்கிறது என்றால்… அதற்கு கேபிள் சங்கரும், தனஞ்ஜெயனும் தான் முக்கியமான காரணம். இதற்காக இவர்கள் இருவருக்கும் நன்றி.
தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘நாங்கள் பார்த்த திரில்லர் திரைப்படங்களில் ஒரு நொடி வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் எங்களால் யூகிக்கவே முடியவில்லை. மிகவும் அற்புதமான படைப்பு ‘ என பாராட்டு தெரிவித்தனர். இது எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது.
இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்… எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி… அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற நடந்த சம்பவம் தான் இந்த படத்தின் கதை. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம். அறிமுக இசையமைப்பாளர். இவரின்
இசையில் உருவான பாடல்களை கேட்டிருக்கிறேன். திறமை இருக்கிறது. அதனால் வாய்ப்பு அளித்திருக்கிறேன். இந்தத் திரைப்படம் மியூசிக்கலாகவும் நன்றாக வந்திருக்கிறது. இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெளியான பிறகு இசையமைப்பாளருக்கும் நல்லதொரு அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கும்” என்றார்.
நாயகன் தமன்குமார் பேசுகையில், ” ஒரு நொடி… ஒருவருக்கு ஒருவர் எப்போது உதவி செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால் நிறைய பேர் நம்மை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இது உதவி செய்யும் போது தெரியாது. கொஞ்சம் நாட்கள் கழித்து அல்லது கொஞ்சம் மாதங்கள் கழித்து.. நம்மை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு நொடியில் நமக்கு புரிய வரும். சினிமாவில் இது போன்ற அனுபவங்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். சில பேருடைய வாழ்க்கையிலும் இது ஏற்பட்டிருக்கும். சில பேருக்கு இது குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு உடனிருக்கும் நண்பர்களால் ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய வாழ்க்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டவர்களை நான் மறந்து விட்டேன். ஆனால் உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்கவில்லை. என் வாழ்க்கையில் முக்கியமாக ஒருவர் உதவி செய்தார் என்றால்… அது ஈரோடு மகேஷ் தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் இல்லை என்றால்… கடந்த பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக திரைத்துறையில் நான் இருந்திருக்க மாட்டேன்.
தற்போது ஒரு நொடி படத்தில் நடித்ததால் அனைத்தையும் கடந்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவை சுமாரான வெற்றியை பெற்றிருக்கின்றன. சில படங்கள் வெளிவராமல் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் ஊடகவியலாளர்களான நீங்கள் என் மீது அக்கறை கொண்டு ஊக்கப்படுத்தினீர்கள். இதற்காக இந்த தருணத்தில் நான் உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.