தமிழ்ச்சினிமாவில் எத்தனையோ இசை அமைப்பாளர்கள் சாதனை படைத்திருந்தாலும் அவர்களை விஞ்சி நிற்பவர் இசைஞானி இளையராஜா.!
இந்திப் படப் பாடல்களில் மட்டுமே லயித்துக்கிடந்த தமிழக இளைஞர்களை “அன்னக்கிளி உன்னைத்தேடுதே” என்று தேட வைத்தவர் பண்ணைப்புரத்து ராசா. இளைய ராசா .!
விபூதி கீற்றும் நாமமும் பட்டு சட்டை ,பஞ்சகச்சம் சகிதமாக சபை ஏறியவர்கள் மட்டுமே சங்கீதம் அறிந்தவர்கள் என்று கொண்டாடப்பட்ட காலத்தில் சாதாரண கிராமத்து இளைஞனான ராசய்யா ஒரே படத்தில் அத்தனை சங்கீதக்காரர்களையும் ஓரம் கட்டி பரணில் கட்டிப் போட்டது சரித்திர சாதனைஅல்லவா !
“நீ இளைய ராசா அல்லன் ,இசைஞானி !” என சிகரத்தில் ஏற்றிவைத்தார் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.
அந்த ஞானிக்கு பொன் விழா நடத்தி பெருமைப்படுத்திவிட்டார் கலைஞரின் வழியில் நல்லாட்சி நடத்திச்செல்கிற முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சிம்பனி என்கிற மேலை நாட்டு இசையையும் விட்டு வைக்கவில்லை நமது ஞானி. அதிலும் தனித்த சாதனை.
ஒன்றிய அரசுக்கும் கடமை இருக்கிறது உயரிய விருது வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் பாராட்டு விழாவில் வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
செவி சாய்ப்பர் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
இந்த விழாவில் கலந்து கொண்ட கலைஞானி கமல்ஹாசன் தனது மகிழ்ச்சியை பாடலாக பாடி தெரிவித்துக் கொண்டார். ராசா இசை அமைத்திருந்த ‘ஹே ராம் ‘படத்தின் ஒரு பாடலது மெட்டு.
சூப்பர் ஸ்டார் ரஜினி எந்த விழாவாக இருந்தாலும் தனியாக தனது முத்திரையை பதித்து விடுவார் .அவரது பாணி.
இளையராஜா பீர் அடித்தது, அரை பாட்டில் பீருக்கேஅதிகாலை மூணு மணி வரை ஆட்டம் போட்டு ,அன்றைய கதாநாயகிகளைப் பற்றிய கிசு கிசுக்களை கேட்டது என ராஜாவின் கருப்புப் பக்கங்களை வாசித்தது சரியா,நியாயமா , சாதனைகளை பட்டியலிட வேண்டிய நேரத்தில் ரஜினி அப்படி சொல்லியிருக்க வேண்டுமா ? என்னைப் போன்றவர்கள் இப்படி கேள்விகளை கேட்காமல் இருக்க முடியாது.
இது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது திட்டமிட்டே நடத்தப்பட்டதா ?
சந்தேகமே வேண்டாம் திட்டமிட்டுத்தான் நடந்தது என்பதை ரஜினியே சொல்லிவிட்டார்.
“:நான் இப்படியெல்லாம் பேசப்போகிறேன் என்பதை முதல் நாளிலே சாமியிடம் சொல்லிவிட்டேன் “என்பது சூப்பர் ஸ்டாரின் ஒப்புதல் வாக்குமூலம்.
சரியான நேரம் பார்த்து சங்கறுத்துவிட்டாரோ என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது.
“என்னால்தான் ,எனது இசையினால்தான் படங்கள் சில்வர் ஜுபிலி பார்த்தன .என்னுடைய இசை இல்லாமல் எந்தப்படமும் வெற்றி பெறமுடியாது” என்று ஒரு காலத்தில் இளையராஜா கர்வம் கொண்டு ஒரு விழாவில் பேசியதின் விளைவாக ஒரு குழு அமைந்து அவரை வீழ்த்தியதெல்லாம் சம்பவம் இல்லை .சத்தியம். அவர்களில் ஒருவர் ரஜினியும் ஆவார். சூப்பர் ஸ்டார் அப்படி பேசியதினால் பழையவை நினைவுக்கு வந்து விட்டன.
ஏஆர் ரகுமானை கொண்டு வந்தது இசைஞானியின் மீதான கோபத்தின் வெளிப்பாடு. இவைகளை நினைவு கூற வைத்துவிட்டார் சூப்பர் ஸ்டார் என்பதுதான் எனது குற்றச்சாட்டு.கொட்டைஎழுத்து தலைப்புகளுக்காக செய்திகள் தேடி அலைந்த என்னைப் போன்றவர்களுக்கு இன்னும் பல செய்திகள் மனதுக்குள்.!
–-தேவிமணி












