
‘ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளியாகியிருக்கும் திரைப்படம், ’மெல்லிசை’. எழுதி இயக்கியிருக்கிறார், திரவ். இதில் கிஷோர், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி உள்ளிட்ட நடித்துள்ளனர். இசை, சங்கர் ரங்கராஜன். ஒளிப்பதிவு, தேவராஜ்.
தனியார் பள்ளி ஒன்றில், கணவன் மனைவியான, கிஷோரும், சுபத்ரா ராபர்ட்டும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.
உடற்கல்வி ஆசிரியரான கிஷோருக்கு பாடகராக ஆகவேண்டும் என்பதில் ஆசை. சிறுவயதில் முயற்சி எடுத்தும், குடும்ப சூழ்நிலை காரணமாக அது நிராசையாக போகிறது. தீராத ஆசைக் கனவுகளுடன் காலத்தை ஓட்டிவருகிறார்.
அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது மகள், தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளச்செய்து, பரிசுகளையும் பெற வைக்கிறார். அவ்வப்போது விடுமுறை எடுத்துக்கொண்டு, இந்த போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் கிஷோரை, தலைமை ஆசிரியர் கண்டிக்கிறார். தன் ஆசைக்கனவுகள் நிறைவேறும் தருவாயில் வேலையை உதறித்தள்ள மனம் இருந்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக அது முடியாமல் போகிறது. தவித்து வரும் சூழலில், அவர் என்ன செய்தார்? என்பது தான், மெல்லிசை.
நாயகனாக நடித்திருக்கும் கிஷோர், ஒரு ஆசிரியராகவும், சிறந்த பாடகனாக, நிறைவேறாத கனவுகளுடன் எப்படியாவது போட்டியில் வெற்றிபெறத் துடிப்பவராகவும், குடும்பத்தின் மீது பற்று கொண்டவராகவும் சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார்.
சுபத்ரா ராபர்ட், பொறுப்பான குடும்பத் தலைவியாகவும், கணவனின் கனவுக்காக மேலும் அதிக குடும்பப் பொறுப்பினை சுமப்பவராகவும், கணவனின் மேல் காதல் கொண்டவராகவும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
அதேபோல், கிஷோரின் மகளாக நடித்திருக்கும் தனன்யா, மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர். அவர்கள் வீட்டை சொந்தமாக வாங்க திட்டமிடும் காட்சி, சிறப்பான காட்சி.
ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜனின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மெல்லிசை – சுகம்!












