தமிழக முதல்வர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் தேர்தல் விதிகளின்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, திருச்சி கிழக்குத் தொகுதியை விட்டுக்கொடுத்து பெரம்பூர் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.இந்நிலையில் இந்த தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் போட்டியிட போவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
இந்நிலையில் இது குறித்து நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது,”அனைவருக்கும் வணக்கம். இந்த காணொளிப் பதிவு, இரண்டு முக்கியமான செய்திகளை உங்களிடம் தெளிவுபடுத்துவதற்காகவே வெளியிடப்படுகிறது. , ‘திருச்சி கிழக்கு’ தொகுதி குறித்துப் பரவும் செய்திகளுக்கான விளக்கம். இரண்டாவது, நான் அண்மையில் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஒரு வார்த்தையைச் சர்ச்சையாக்கியதற்கான விளக்கம் ஆகும்.
முதலாவதாக, செய்தியாளர்கள் சந்திப்பைப் பற்றிப் பேசலாம். நான் செய்தியாளர்கள்
சந்திப்பை முடித்துத் திரும்பியதும், ஒரு செய்தியைச் சர்ச்சையாக்கி, அது குறித்து
இரண்டு மூன்று பேர் தவறாகப் பேசுவதை அறிந்தேன். உடனே, ‘நான் ஏன் எனது மக்களை
அவ்வாறு பேசப் போகிறேன்? நான் ஏன் எனது மக்களைப் பற்றி அவ்வாறு தவறாக நினைக்கப்
போகிறேன்?’ என்று தமிழ் மொழியிலேயே பதிவிட்டு, எனது படப்பிடிப்புப் பணிகளுக்குச்
சென்றுவிட்டேன்.
நான் படப்பிடிப்பில் இருந்தபோது, இரண்டு நாட்களுக்குப் பிறகு எனது நண்பர்கள்
தொலைபேசியில் அழைத்து, ‘லாரன்ஸ், நீங்கள் இதற்கு ஒரு காணொளி விளக்கம் அளித்தால்
நன்றாக இருக்கும். அனைவரும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். சிலர் இதைத்
தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, உங்களைப் பற்றித் தவறாகப் பேசி வருகிறார்கள்’
என்றனர். ‘நான் தான் ஏற்கெனவே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிட்டேனே, மீண்டும் ஏன்
அதையே பேசிக்கொண்டிருக்க வேண்டும்? நாம் தவறு செய்யவில்லை, எனவே இதைப் பற்றிக்
கவலைப்படத் தேவையில்லை’ என்று நான் கடந்து சென்றுவிட்டேன்.
அதன் பின்னர், எனது அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகள் அனைவரும் தொலைபேசியில்
அழைத்து, ‘மாமா, தயவுசெய்து இதற்கொரு காணொளி விளக்கம் அளிக்கவும். இந்த விவகாரம் தவறான திசையில் சென்றுகொண்டிருக்கிறது’ என்று வருத்தத்துடன் பேசினர். அனைவரும் இவ்வாறு வலியுறுத்தியதால் வீட்டிற்குச் சென்றபோது, எனது தாயாரும் மிகவும்
வருத்தத்துடன் இருந்தார். ‘இதற்காகத்தான் உன்னை அரசியலுக்குச் செல்ல வேண்டாம் என்று
கூறினேன்’ என்றார். அப்போதுதான் இந்த விவகாரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதை உணர்ந்து நண்பர்களிடம் விசாரித்தேன். நான் கூறிய கருத்து வேறு, ஆனால் அவர்கள் தவறாகப் பேசி வருகின்றனர்.
ராஜகோபாலின் நெகிழ்ச்சியான கதை
அப்போதுதான் எனக்கு மிகவும் நெருக்கமான, எனது அறக்கட்டளையில் உள்ள ராஜகோபால் என்ற தம்பி தொலைபேசியில் அழைத்து, ‘மாமா, நீங்கள் ஒரு காணொளி வெளியிடுங்கள்’ என்று கூறினான்.
இதுவரை நீங்கள் எனது அறக்கட்டளைக் குழந்தைகள் நடனமாடுகிறார்கள், படிக்கிறார்கள்
என்று மேலோட்டமாக மட்டுமே பார்த்துள்ளீர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,
நடனமாடுகிறார்கள், மாஸ்டரின் பிறந்தநாளுக்குக் கேக் வெட்டுகிறார்கள் என்று மட்டுமே
பார்த்திருப்பீர்கள். ஆனால், அவர்களின் ஒவ்வொரு வாழ்க்கையிலும் எவ்வளவு துன்பம்
உள்ளது, அவர்களை நான் எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்தேன் என்பதை இப்போது நான்
விளக்குகிறேன். ஒவ்வொரு குழந்தையும் எவ்வாறு என்னிடம் வந்து சேர்ந்தார்கள்,
அவர்களின் துன்பம் என்ன, நான் எவ்வளவு சிரமப்பட்டேன், தற்போது அவர்கள் எந்த
நிலையில் உள்ளனர் என்பதை இந்தத் தம்பியின் (ராஜகோபால்) மூலம் உங்களுக்கு
அறிமுகப்படுத்துகிறேன்.
(ராஜகோபாலை அறிமுகப்படுத்தி) இவர்தான் ராஜகோபால். இந்தக் காணொளியில் பேசுவதற்காகவே மிகவும் சிரமப்பட்டு இங்கு வந்து அமர்ந்துள்ளார். இவர் அதிகமாக எதையும் ஆசைப்பட மாட்டார். ஏதேனும் ஆசைப்பட்டுக் கேட்டால் உடனே செய்துவிட வேண்டும், இல்லையென்றால் சற்று கோபம் வந்துவிடும். இவர் யார் என்பதை முதலில் உங்களுக்குக் கூறுகிறேன்.
இவர் எனது அறக்கட்டளையில் இணைந்து இருபது ஆண்டுகள் முடிகின்றன. ஒரு நாள் இரவு 11
மணிக்கு, ‘உங்கள் வீட்டிற்கு வெளியே யாரோ ஒருவர் காத்திருக்கிறார், உங்களைச்
சந்திக்க வேண்டும் எனக் கூறுகிறார்’ என்று என்னிடம் கூறினர். நான், ‘இரவு 11 மணி
ஆகிவிட்டது, நாளை காலையில் வரச் சொல்லுங்கள்’ என்றேன். பொதுவாகப் பலர் கல்வி
உதவிக்காகவோ அல்லது இதய அறுவைச் சிகிச்சைக்காகவோ வருவது வழக்கம். ஆனால் அவர்கள்,’இவருக்குப் பெற்றோர் யாரும் இல்லை, கிராமத்திலிருந்து உங்களை மட்டுமே நம்பி
வந்துள்ளார், உங்களைக் காணக் காத்திருக்கிறார்’ என்றனர்.
நான் கீழே சென்று பார்த்தபோது, அப்போது அவரால் ஓரளவு நடக்க முடிந்தது. சற்று
குனிந்து குனிந்து நடந்து வரும் அளவிற்கு அவரால் முடிந்தது. என்னைக் கண்டவுடன்
அவரது கண்களில் கண்ணீர் பெருகியது, கலங்கி வந்து என்னை அப்படியே தழுவிக்கொண்டார்.
அந்தத் தழுவலிலேயே அவருக்குள் இருக்கும் வலியை என்னால் உணர முடிந்தது. அவரை அமர வைத்து விசாரித்தேன். ‘ஐயா, எனக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை, யாரும் இல்லை.
என்னால் ஓரளவுதான் நடக்க முடியும். உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் இங்கேயே
உங்களுடன் தங்கிவிடுகிறேன். எனக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து நீங்கள்
என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.
அப்போது எனது அறக்கட்டளையில் சிறு குழந்தைகள் மட்டுமே இருந்தனர். வளர்ந்த ஒருவரை
எவ்வாறு சேர்ப்பது, குழந்தைகளுடன் இவரை எவ்வாறு வளர்ப்பது என்ற குழப்பங்கள் என்
மனதில் ஓடின. இருப்பினும், ‘என்ன நடந்தாலும் சரி, இறைவன் இவரை அனுப்பியுள்ளார்,
பார்த்துக்கொள்ளலாம்’ என்று உள்ளே அழைத்துச் சென்று முதலில் உணவு வழங்கினேன்.
அந்தப் பசியில் அவர் உணவருந்திய விதமும், உணவருந்தும்போது அவரது கண்கள் கலங்கியதும் இன்றளவும் எனக்கு அழுகையைத் தருகிறது. அவ்வளவு பசியில் அவர் இருந்தார்.

ராஜகோபாலின் சிகிச்சையும் லாரன்சின் வேதனையும்
அவருக்குத் தனி அறை வழங்கித் தங்க வைத்தேன். ஆனால் மற்ற சிறு குழந்தைகள் ஒன்றாக
இருப்பதையும், தான் மட்டும் தனியாக இருப்பதையும் கண்டு அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி,
ஒரு நாள் இரவு தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்! ரத்தம் பெருகுகிறது என்று எனக்குத்
தகவல் வந்ததும் பதறி ஓடினேன். அவரை மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்கு ஏதேனும்
ஆகிவிடுமோ என்று அஞ்சி, பின்னர் இல்லத்திற்கு அழைத்து வந்தேன். ‘தம்பி, இனிமேல்
இவ்வாறு செய்யாதே’ என்று அறிவுறுத்தினேன்.
அதன் பின்னரே அவர் நிலைமையை உணர்ந்துகொண்டார். ‘ஆமாம் மாஸ்டர், கீழே இருந்தால்
அனைவரும் வந்து செல்கிறார்கள், எனக்குத் தூக்கம் இல்லை, மேலே இருந்தால் நிம்மதியாக
உள்ளது’ என்றார். இத்தகைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத் திடீரெனக் கோபம் வரும்,
அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், நன்றாக நடந்து கொண்டிருந்த அவருக்கு, வெளியே செல்ல வேண்டாம் என்று
கூறியதையும் மீறிச் சென்றதால் ஒரு நாள் கீழே விழுந்து முதுகெலும்பில் பலத்த காயம்
ஏற்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்தால்தான் அமரக்கூட முடியும் என்று மருத்துவர்கள்
கூறிவிட்டனர். அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையை முடிவு செய்தபோது, ‘நான் காவேரி
மருத்துவமனையில்தான் அறுவைச் சிகிச்சை செய்துகொள்வேன்’ என்று அவர் பிடிவாதமாக
இருந்தார். ஏனெனில், அக்காலத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் அங்கு
சிகிச்சை பெற்று வந்ததால், ‘அங்குதான் முதலமைச்சர் உள்ளிட்ட பெரிய தலைவர்கள்
சிகிச்சை பெறுகிறார்கள், அதுதான் பெரிய மருத்துவமனை, எனக்கு அங்குதான் சிகிச்சை
வேண்டும்’ என்றார்.
எனது தம்பி அல்லது பிள்ளை போன்றவர் என்பதால், அவரைக் காவேரி மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்று, அங்கிருந்த மருத்துவர் ஷாம் சுந்தர் அவர்களின் மூலமாக ஐந்து
ஆண்டுகளுக்கு முன்பு அறுவைச் சிகிச்சை செய்தோம். அறுவைச் சிகிச்சைக்குப் பின்
அவரால் தனியாக இயங்க முடியாது என்பதால், ஒருவரைப் பராமரிப்பாளராக நியமித்து, எனது சொந்த இல்லத்தில், நான் முதன்முதலில் வாங்கிய இல்லத்தில் வைத்துப்
பார்த்துக்கொள்கிறேன்.
இதையெல்லாம் நான் மக்களின் பணத்தைக் கொண்டுதான் செய்கிறேன். அப்படியிருக்க, நான் எனது மக்களைப் பற்றித் தவறாகப் பேசுவேனா? என் தாயார் வருத்தப்பட்டு அழுதார். இத்தனை கஷ்டங்களை நான் கடந்து வந்துள்ளேன். எனக்குள் பல வலிகள் உள்ளன. நான் உண்மையாகவே அவர்களைப் பராமரித்து வருகிறேன். இதைக் கேட்கும்போது மனதுக்கு வருத்தமாக உள்ளது.
(இப்போது ராஜகோபால் பேசுகிறார்): ‘மாமா… நான் பேச வேண்டும்… நீங்கள் என்னை
எவ்வாறு அரவணைத்துக் கொண்டீர்கள் என்பதை இந்த உலகத்திற்கு நான் கூற வேண்டும். எனது தாய் என்னை விட்டுச் சென்றபோது கூட நீங்கள் தான் என்னைப் பார்த்துக்கொண்டீர்கள். நீங்கள் எனக்குத் தாய், தந்தை எல்லாமே. எனக்கு நீங்கள் மட்டுமே உள்ளீர்கள்.’
(ராகவா லாரன்ஸ் சமாதானப்படுத்துகிறார்): ‘அழாதே தம்பி, போதும்… ஏற்கெனவே கழுத்து
வலியுடன் இருக்கிறாய், உணர்ச்சிவசப்பட வேண்டாம், பேசத் தேவையில்லை.’

அரசியல் களம் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி சர்ச்சை
‘நான்கு பேருக்கு உணவு வழங்கிவிட்டோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு நடனம்
கற்றுக்கொடுத்துவிட்டோ அரசியலுக்கு வந்துவிடலாமா?’ என்று சிலர் கேட்கிறார்கள். நான்
வெறும் உணவு மட்டும் வழங்கவில்லை, ஒரு மனிதனின் வாழ்க்கையையே உருவாக்கியுள்ளேன்.
அது மிகவும் கடினமான பணி. பலர் அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்வதாகக்
கூறுவார்கள். ஆனால், நான் ஏற்கெனவே இந்தச் சேவைகளைச் செய்து வருகிறேன் என்றுதான்
கூறுகிறேன். நான் இன்னும் அரசியலுக்கு வருவதாகக் கூட அறிவிக்கவில்லை, அதற்குள்ளாக
இவ்வாறு பேசுகிறார்கள்.
அடுத்ததாக, இந்தத் திருச்சி கிழக்குத் தொகுதி விவகாரம். பலர் ‘திருச்சி கிழக்குத்
தொகுதியில் லாரன்ஸ் போட்டியிட வேண்டும், நீங்கள் வந்தால் நாங்கள் வாக்களிப்போம்’
என்று அன்புடன் அழைக்கிறீர்கள். உங்கள் அன்பிற்கு எனது நன்றிகள். ஆனால், விஜய்
அண்ணா அவர்கள் எப்போது கதாநாயகன் ஆனாரோ, அக்காலத்திலிருந்தே அவரோட போஸ்டர்களை ஒட்டி, அவரது கட்சிக்காகப் பல ஆண்டுகளாக உழைத்து, ஆரம்பக் காலத்திலிருந்து அவருடன் இருந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா அல்லது நான் வர வேண்டுமா?
விஜய் அண்ணாவின் இல்லத்தில் திருச்சி தொகுதிக்காக இன்னும் எத்தனை பேர்
காத்துக்கொண்டிருக்கிறார்களோ நமக்குத் தெரியாது. அதை விஜய் அண்ணாதான் முடிவு செய்ய வேண்டும். அவர் யாரை நிறுத்த விரும்புகிறாரோ, அவர்கள் போட்டியிடுவார்கள். ஏனெனில், விஜய் அண்ணாவின் முகத்திற்காகத்தான் வாக்குகள் விழுகின்றன. அந்த இடத்தில் நான் சென்று போட்டியிடுவது தர்மம் ஆகாது.
யாரோ விதை விதைப்பார்கள், செடி முளைக்கும், வேலி அமைப்பார்கள், மரம் வளரும், பழம்
தரும். அந்தப் பழத்தை நான் மட்டும் பறித்துச் சாப்பிடலாமா? அல்லது விதை விதைத்தவர்
சாப்பிட வேண்டுமா? நாம் ஒரு கட்சியில் இணைய வேண்டுமானால், முதலில் அடிப்படை
உறுப்பினராக இணைந்து, மூன்று நான்கு ஆண்டுகள் உழைக்க வேண்டும். ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்பதே எனது கொள்கை. நாம் உழைத்த பின்னர், கட்சித் தலைமை நமது உழைப்பை அங்கீகரித்து ஒரு பொறுப்பை வழங்கினால், அதில் நம் கடமையைச் செய்ய வேண்டும். அதுவே தர்மம்.
முதலில் எனது அரசியல் நிலைப்பாடு, நான் ஏன் அரசியலுக்கு வந்துள்ளேன், யாருடன்
பயணிக்கப் போகிறேன் என்பதை முறைப்படி அறிவிப்பேன். நான் அவர்களிடம்
(முதலமைச்சர்/அமைச்சர்கள்) ஒரே ஒரு உதவியை மட்டும் உரிமையோடு கேட்கப் போகிறேன்.கலைஞர் ஐயா இருந்தபோது நான் சில குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சைக்கான உதவியைக் கேட்டேன், அவரும் செய்தார். அதன் பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம்
எனது அறக்கட்டளையைச் சார்ந்த மாற்றுத்திறனாளி தம்பிகள் ‘மல்லர் கம்பம்’ கற்றுக்
கொண்டுள்ளனர், அவர்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்று ஒரு காணொளியை அனுப்பினேன். அவர் அதனை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, ஒரே வாரத்தில்
முதலமைச்சர் முன்னிலையில் அவர்களை ஆட வைத்தார் [1]. அதுபோல, அன்புமணி ராமதாஸ்அவர்களும் உதவி செய்துள்ளார்.
விஜய் அண்ணா அவர்கள் நடிகராக இருக்கும்போதே ஒரு குழந்தைக்குத் தனது சொந்தப்
பணத்தில் அறுவைச் சிகிச்சை செய்து காப்பாற்றினார். இப்போது அவர் முதலமைச்சர்
பொறுப்பில் உள்ளார். எனவே, நான் அவரிடம் உரிமையோடு, 1000 குழந்தைகளுக்கு அறுவைச்
சிகிச்சை செய்ய வேண்டும் என்று உதவி கேட்பேன். அதை நான் மக்கள் நன்மைக்காக
உரிமையோடு கேட்பேனே தவிர, எந்தப் பதவிக்காகவும் கேட்க மாட்டேன்.
யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று எண்ண வேண்டாம்.
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்றுதான் கூறினேன், வேறு
எங்கும் போட்டியிட மாட்டேன் என்று கூறவில்லை. நாம் போட்டியிடுவோம்! பொறுமையாக,
முறையான வழியில் அடிமேல் அடி வைத்துப் பயணிப்போம். இது அவசரப்பட்டு காய்கறி
வாங்கும் கடை அல்ல. இத்தனை காலம் உழைத்து நான் சம்பாதித்த நல்ல பெயரை யாரிடமும்
எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டேன். எங்கு நமக்கு மரியாதை கிடைக்கிறதோ, யாருடன்
இணைந்தால் மக்களுக்கு நன்மை விளையுமோ, அதை ஆராய்ந்து பொறுமையாக நானே உங்களுக்கு அறிவிப்பேன். நான் அதிகாரத்தை அனுபவிப்பதற்காக வரவில்லை, மக்களின் பின்னால் நின்று அவர்களின் துன்பங்களைத் தீர்ப்பதற்காக வருகிறேன்.
சேவைக்காக மாற்றம்… மாற்றமே சேவை… நன்றி!












