எம தர்ம ராஜனை குலதெய்வமாக வழிபடும் திருடுவதையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வரும் கூட்டம் ஒன்று ஆந்திராவின் மலைப்பகுதி ஒன்றில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வசித்து வருகிறது. இந்த இந்த கும்பலின் தலைவி விஜியின் மகன்தான் விஜய்சேதுபதி. இவரது பெயரே எமன். இவர்களின் குலத்தொழிலே திருடுவது மட்டுமே. ஒவ்வொருமுறையும் பக்கத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நகை, பணங்களை கொள்ளையடித்துவிட்டு தங்களின் இருப்பிடத்திற்குத் திரும்புவது இவர்களின் வழக்கம். அப்படியொரு முறை சென்னைக்குத் திருடச்செல்லும்போது, அங்கே கவுதம் கார்த்திக்கின் காதலி நிகாரிகாவைப் பார்க்கும் விஜய்சேதுபதி. ‘இவளுக்காகத்தான் நான் 14 வருடமாக காத்திருந்தேன். இவளே என் மனைவி’ எனச் சொல்லி அவரை தன் இருப்பிடத்திற்கு கடத்திச் செல்கிறார் . கடத்தப்பட்ட நிகாரிகாவைத் தேடி கவுதம் கார்த்திக்கும் அவரின் நண்பன் டேனியலும் ஆந்திர மலைப்பகுதிக்கு விரைகின்றனர் .இதையடுத்து என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் திரைக்கதை. தங்களுக்கென உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களின் படி திருடும் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. பல கெட்டப்களில் வந்து கலக்குகிறார்.அழகான சாக்லேட்பாய் கெட்டப்பில் அசத்துகிறார் கவுதம் கார்த்திக்.கல்லூரி மாணவனாக விழாவில் பங்கேற்று பாடுவது ஆடுவது என சிறு வயது கார்த்திக்கை நினைவு படுத்துகிறார்.நிஹாரிகா மற்றும் காயத்ரியும் கச்சிதம் . லாஜிக்கை எல்லாம் தூக்கி கடாசி விட்டு காமெடி ஒன்றே குறிக்கோள் என்பதில் தீவிர கவனம் செலுத்திய இயக்குனர் பல இடங்களில் வளவள காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். சில இடங்களில் காமெடி எரிச்சல் ஊட்டுகிறது. வசனம் திரைக்கதை சொதப்பல் என்பதால் நமக்கு அநியாயத்திற்கு சிரிப்பை விட கொட்டாவியே வருகிறது. விஜய் சேதுபதி இனி கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால் அவரது கேரியருக்கு நல்லது. மொத்தத்தில் அட போங்கப்பா , கொடுமை கொடுமை என கோவிலுக்கு போனால் அங்கே ஒரு கொடுமை அவுத்து போட்டு ஆடுதாம்! அடுத்த படமாவது ஒருநல்ல நாள் பார்த்து ,நல்ல கதையா பார்த்து எடுங்க அப்புறமா பார்க்கலாம் .