‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா ‘என ஆண்களும் பாடக்கூடிய மலர் மல்லிகை. வைஜயந்தி மூவிஸ் ஸ்வப்ன சினிமா வழியாக நம்மை மல்லிகை பந்தலுக்கே அழைத்து சென்று விட்டார்கள். மூன்று மணி நேரம் சுகந்தத்தில் நனைந்து விட்டு வெளியில் வந்தால் கண்கள் முழுக்க கீர்த்தி சுரேஷ். மறக்க முடியவில்லை அவரையும் துல்கர் சல்மானையும்!
நடிகையர் திலகம் என்பது சாவித்திரி என்கிற ஒரு சகாப்தத்தின் வாழ்க்கைப் பதிவு. டாக்குமெண்டரியாக இருந்து வெறுப்பு ஏற்றாமல் நம்மை மூன்று மணி நேரம் மகிழ வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுப் பொறுப்பு இயக்குநர் நாக் அஸ்வினுக்குத்தான்!
அற்புதமான டீம். டானி ச லோ ஒளிப்பதிவு.ஆர்ட் கன்சல்டன்ட் தோட்டா தரணி. இவர்களின் தலைமையில் சிக்சர்களாக விளாசுவதற்கு கீர்த்தி சுரேஷ், துல்கர்,கச்சிதமாக பால்களை பிடிப்பதற்கு சமந்தா அக்கி நேனி, ராஜேந்திர பிரசாத் என ஒரு வலுவான அணியை உருவாக்கி இருக்கிறார்கள். டோனி- கோலி அணியின் மேட்ச்சைப் பார்ப்பது போல இருக்கிறது.
மருத்துவமனையில் சீரியசான கட்டத்தில் கதையை தொடங்கினாலும் படிப்படியாக சாவித்திரியின் கதையை வேகம் குறையாமல் கொண்டு சென்று இருக்கிறார்கள்.
பத்திரிகை நிருபர்கள் சமந்தா-விஜய் தேவர கொண்டா இருவர் வழியாக கதையை கொண்டு சென்றிருக்கும் பாங்கு புத்திசாலித்தனமானது. அங்கங்கே ஜெமினி-சாவித்திரி இடையேயான அந்தரங்கம்.ஈகோ, முட்டல் மோதல் இவைகளை மிகைப்படுத்தாமல் சுகப்படுத்தியது படத்தை மேன்மைப் படுத்தி இருக்கிறது.
சாவித்திரியை முதன் முதலாக மேக்-அப் டெஸ்ட்டில் சந்திக்கும் ஜெமினி கணேசன் அவரது வாழ்க்கைத் துணையாவது உலகம் அறிந்த ஒன்றுதான் என்றாலும் அதில் இருந்த இயல்பு குலையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
வாத்தியாரின் பேத்தி கீர்த்தி சுரேஷின் அழகும், சாவித்திரியை நினைவு படுத்துகிற உடல்மொழியும் சூப்பர்.மாயாபஜாரின் ‘கல்யாண சமையல் சாதம் ‘பாடலில் எஸ்.வி.ரெங்கா ராவை பிரதி எடுத்துள்ள நேர்த்தி. சூப்பர். துள்ளலும் துடிப்புமாக சென்ற அவரது வாழ்க்கையில் சொந்தப்படம் எடுத்தது சோகம், என்றால் அவரது சொந்தங்கள் சொத்துகளை சுருட்டிக்கொண்டது அவரை படு குழியில் வீழ்த்துகிறது. ஜெமினியின் பிரிவு, போதைக்கு அடிமை ஆவது என்பதெல்லாம் மிகை இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். கீர்த்தி,சுரேஷ் இவர்கள் இருவரும் ஜெமினி சாவித்திரியாக வாழ்ந்திருக்கிறார்கள், சில காட்சிகளில் கொண்டு வந்திருக்கிறார்கள்..
கீர்த்திக்கு விருதுகள் நிச்சயம்.
விஜயா-வாகினியின் படங்கள் என்றால் ஒளிப்பதிவில் தனித்தன்மை இருக்கும்.அதை ஒளிப்பதிவாளர் டானி.பரபரப்பான அந்த காலத்து படப்பிடிப்பு நிலையத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறார் தோட்டா தரணி.
கொட்டும் மழையில் ஆதரவு கேட்டு வாசலில் நிற்கும் சாவித்திரி,கதவை திறந்து உறையாமலும் உடையாமலும் இயல்பாக பார்க்கும் ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி என்கிற அலமேலு ,என்ன சொல்வது என புரியாமல் நிற்கிற ஜெமினி என்கிற அந்த ஒற்றைக்காட்சியில் கலங்காமல் ,கண்ணீர் விடாமல் இருப்பது சாத்திய மில்லை.
வசனமும் பாடலும் மதன் கார்க்கி, ஜெமினியைப் பற்றி சொல்கிற வசனங்களில் உண்மையைத் தடவி இருக்கிறார். காதல் மன்னனின் மார்பில் புரளாத பெண்களின் பட்டியலை தொடாமல் இருக்க முடியாது. அதை தொட்டாலும் அநாகரீகம்.என்பதால் படும் படாமல் சொல்லிவிட்டார். பாராட்டுகள்.
மூன்று மணி நேரம் என்பது இந்த காலத்தில் பெரும் சுமை. முற்பகுதியில் சற்றே கத்திரி வைத்திருக்கலாம் .ஆனால் இரு மாநிலங்கள் தொடர்புடைய படம் என்பதால் எடிட்டிங் வேங்கடேஸ்வரராவ் கத்திரிக்கு தயக்கம்.
நடிகையர் திலகம் குடும்பத்துடன் சென்று ‘வாங்க ‘ வேண்டிய குத்து விளக்கு!
அச்சமின்றி செல்க.!