கலைஞர் சொன்ன” ஓய்வெடுக்காதவன் உறங்குகிறான் இதோ” என்கிற சொல்லைத் தாங்கிய சந்தனப் பேழையில் உறங்குவதற்கு பீரங்கி வண்டியில் அமர்ந்தது அந்த தமிழ்ச் சிங்கம்.
போராட்டமே வாழ்க்கையாகிப் போன முத்தமிழ் வேந்தனுக்கு அண்ணனின் அருகே உறங்குவதற்குக்கூட போராட வேண்டியதாகிவிட்டது.
என்றும் நீதி இவர் பக்கம்தானே!
என் செய்ய முடியும் எடுபிடிகளின் சதி ஆட்டம்?
தர்மத்தின் காவலன் வங்கக் கரையோரம் இனியாவது ஒய்வு எடுக்கட்டும் என்று நீதி தேவதை ஆணை இட்டுவிட்டாள்!
இறுதிப்பயணம்!
லட்சக்கணக்கான மக்களின் கண்ணீரில் மிதக்கிறது மன்னவனின் பீரங்கி வண்டி.! முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் பாதுகாப்பாக பயணிக்கிறார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டார். கனிமொழி கலாநிதிமாறன்,டிஆர் பாலு ,ஏ.வ. வேலு மற்றும் பலர் நடந்தே சென்றனர்.
.தந்தை பெரியாரால் கண்ணீர்த்துளிகள் என அழைக்கப்பட்ட கழகத்தவர்களும் மக்களும் கண்ணீர் வழிந்தபடியே கடக்கிறார்கள் கால்களில் வலுவின்றி!
இதயம் ரணமாகி ரத்தம் சுரக்க பெண்களும் ஆண்களும் கதறுகிறார்கள். அவர்கள் என்ன உற்றார் உறவினர்களா?
இல்லை உடன் பிறப்புகள்.!
கழகக் கொடிகளும் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளும் ஏந்தியவர்கள் நடந்து செல்கிறார்கள். 100 அடி நீளமுள்ள கலைஞரின் படங்கள் தாங்கிய பிளக்ஸ் சுமந்து செல்லப்பட்டது.
மாலை வெயிலும் மழைச்சாரலும் மாறிமாறி அஞ்சலி செலுத்தியது.
புண்ணிய பூமியை நனைத்து வெப்பத்தால் ஒத்தடமிட்டது.
இராணுவ மரியாதை பெறக்கூடிய கடைசித் தமிழறிஞர் இவராகத்தான் இருக்க முடியும்!
பழ.கருப்பையாவும்,மனுஷ்யபுத்திரனும்,ரா.பார்த்திபனும்,பர்வீன் சுல்தானாவும் வர்ணனையாளராக மாறி வண்ணத் தமிழால் கலைஞரின் புகழ் பாடினர்.
“என்னருமைத் தம்பி .நான் துயில் கொள்ளும் இடத்துக்கு செல்லும் வழி இதுதான் “என விரல் சுட்டி காட்டுவதைப்போல அமைந்த அண்ணாவின் சிலையைக் கடந்து ராணுவ வாகனம் சென்றது.
வாலாஜா சாலை முழுக்க மனிதத் தலைகள்.
க.அன்பழகன், ,ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிமுக மந்திரி ஜெயகுமார், திருநாவுக்கரசர், மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன். முன்னாள் பிரதமர் தேவே கவுடா,மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் மெரினாவில் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.அவர்களுடன் ஸ்டாலின் கை கொடுத்துவிட்டு பின்னர் அமர்ந்தார்.
கலைஞர் உடல் இருந்த ராணுவ வாகனம் அண்ணா நினைவிடம் வந்து சேர்ந்தது மாலை 6.15. ஸ்டாலின், கனிமொழி ,செல்வி, அழகிரி ,அமர்ந்திருந்தனர்.
உடல் தாங்கியிருந்த பெட்டி வந்ததும் ராணுவ மரியாதையுடன் எடுத்துச்செல்லப்பட்டது. முக்கியத் தலைவர்கள் மரியாதை செலுத்திய பின்னர் இறுதியாக ஆளுநர் மலர் வளையம் வைத்த பின்னர் ராணுவ வாத்தியம் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. கலைஞர் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி ராணுவ முறைப்படி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. பின்னர் குடும்பத்தினர் பூக்கள் வைத்து மரியாதை செலுத்தினர். க.அன்பழகன் தனது ஆருயிர் நண்பர் கலைஞருக்கு மரியாதை செலுத்தி விட்டு சில வினாடிகள் அப்படியே நின்று விட்டார் .அவரை கைத்தாங்கலாக ஸ்டாலினும் கனிமொழியின் மகனும் அழைத்துச்சென்றனர். ஸ்டாலின் அழகிரி, மு.க தமிழரசு ,தயாநிதி மாறன், ஆகியோர் வணங்கிய பின்னர் பெட்டிக்குள் உப்பு அள்ளிப்போட்டனர். ஸ்டாலின் கதறி அழுதது பலரை கண் கலங்க வைத்து விட்டது. குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது