
பி.டி.செல்வகுமார் இன்று தளபதி விஜய்யிடம் இல்லை என்றாலும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் தொடர்பில்தான் இன்றும் இருக்கிறார் .இவர் அளித்திருந்த ரஜினி பற்றிய பேட்டிக்கும் அரசியல் பற்றிய கருத்துக்கும் தளபதி விஜய் நேரிடையாக கருத்து சொல்லாமல் தனது ரசிகர் மன்றத் தலைவர் புஸசி ஆனந்த் வழியாக பதில் அளித்திருந்தார். அதற்கு இன்று செல்வகுமார் அறிக்கை வழியாக ஆணித்தரமாக பதில் சொல்லி இருக்கிறார். அவரது அறிக்கையில் எந்த இடத்திலும் ‘தளபதி’என்கிற வார்த்தையை பயன் படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது.வழக்கம் போலவே யாரோ கேட்டதற்கு சொன்ன பாணியில் அறிக்கை எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத் தலைவருமான பி.டி செல்வகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதாவது அவர் கூறியதாவது, விஜய் சாருக்கும் அவருடைய அப்பாவிற்கும் நான் 25 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கையுள்ள மனிதராக மக்கள் தொடர்பாளராக அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்தேன்.
பேட்டி கொடுப்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். விஜய் சாரின் பெயரை பயன்படுத்தி யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேட்டி கொடுக்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்தை தான் நான் பதிவு செய்திருந்தேன்.
இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டு சிலர் எங்களுக்கு பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்யும் செயலாக தான் எனக்கு தெரிகிறது.
நான் எந்தளவிற்கு உண்மையானவர் என்பது விஜய்க்கும் தெரியும். அவருடைய குடும்பத்தாருக்கும் தெரியும். என் மீது நம்பிக்கை இருந்ததால் தான் எனக்கு புலி படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்திருந்தார்.
நான் விஜய்க்கு மக்கள் தொடர்பாளராக மட்டுமில்லாமல் ஒரு ரசிகனாகவும் இருந்து வந்தேன். தற்போதும் அப்படி தான் இருந்து வருகிறேன் என கூறினார்.
மேலும் இளையராஜாவின் ராயல்டி தொகைக்கு எதிராக குரல் கொடுப்பது ஒரு தயாரிப்பாளராக சகா தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எனவும் பதிலளித்தார்.
விஜயின் ஆதி, தலைவா, காவலன், மெர்சல் போன்ற படங்களின் பிரச்சனைகளின் போதும் அவருடன் இருந்துள்ளேன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ 100 கோடிக்கு அதிகமான விற்பனையான படம் என்றால் அது புலி படம் தான் என கூறினார்.
மேலும் காவலன் பட ரிலீஸின் போது ஆளுங்கட்சியாக திமுக பிரச்சனை செய்த போது கூட நான் 50 லட்சம் கடன் வாங்கி அந்த படத்தை ரிலீஸ் செய்தேன் இது அனைவருக்குமே தெரிந்த உண்மை எனவும் கூறினார்.
அவர் மீது அன்பும் மரியாதையும் இருப்பதால் தான் என்னால் உண்மையான உழைப்பை கொடுக்க முடிந்தது. புலி படத்தின் போது ஐ.டி ரைடு வந்த போதும் கூட அவருக்கு துணையாக இருந்து வந்தேன் என கூறினார்.
தற்போது விஜய் சாருக்கு பி.ஆர் ஓ-வாக இல்லை என்றாலும் அவருடன் ஒரு நல்ல குடும்ப நண்பராக தான் இருந்து வருகிறேன் என கூறினார்.
அதுமட்டுமில்லாமல் விஜய் சாரின் பெயரை பயன்படுத்தி தன்னை வெளிப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.
தற்போதும் நான் பல படங்களுக்கு பி.ஆர்.ஓ-வாக பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் வெளியான விஷாலின் இரும்புத்திரை படம் பிரச்சனைகளை சந்தித்த போது அதனை தீர்த்து மிக பெரிய வெற்றி படமாக அமைய செய்திருந்தேன் எனவும் பதிலளித்தார்.
இன்று வரை நான் விஜய்க்கும் விஜய் குடும்பத்திற்கும் உண்மையான விஸ்வாசம் உள்ள மனிதராக தான் இருந்து வருகிறேன் என கூறினார்.
எனக்கும் விஜய்க்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இறுதியில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என கூறினார்.












