“அழவும்,கூடவே சிரிக்கவும் அதை விட காதலை கண்களில் காண்பிக்கவும் கற்றதெங்கே, சொல்லலாமா?”
காதல் இளவரசன் என மக்களால் கொண்டாடப்பட்ட கமல்ஹாசனிடம் ஒருவர் கேட்கிறார்.
அதற்கு அவர் சொல்கிறார்.
“வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களிடம், பார்த்த படங்கள் இவைகளிடம் இருந்து அழுகை -சிரிப்புகாம்பிநேஷன் முதலில் பார்த்தது திரு.சிவாஜியிடம்,திருமதி சாவித்திரியிடம்.!”
ஆக கற்றதெல்லாம் பள்ளிப்படிப்பு அல்ல. அவரது ஆசான் மனிதர்கள்.
ஆணழகன் என்று புகழப்படுகிற கமலை சினிமாவில் நடிப்பதற்கு தகுதி இல்லை என ஒதுக்கியதும் உண்டு.
“இந்த மூஞ்சி எல்லாம் நடிக்க லாயக்கில்லைன்னு என்னை ஒதுக்கியது உண்டு.சினிமாவில் நுழைஞ்சதும் டைரக்சன் துறையில தீவிர ஈடுபாட்டுடன் இருந்த என்னை பாலசந்தர் சார் மாதிரி உள்ளவங்க ‘இந்த மூஞ்சிய படம் பிடிக்கலாம்’னு நெனச்சதினாலதான் நடிகனானேன்.”என ஒரு பத்திரிகையில் எழுதி இருக்கிறார் கமல்.
இனி தொடருக்கு வரலாம்.
“இரண்டாவது குழந்தை பிறகே திருமணம் பற்றி தீர்மானித்தேன்.திருமணத்தின் விளைவாக உருவானவள் என்பதை விட ஸ்ருதியை எங்களுடைய ஆழமான அன்பின் அடையாளமாகவே நான் கருதுகிறேன்.வீண் சடங்குகளை விட இந்த குழந்தை எங்களுடையது என்கிற உணர்வே முக்கியமானது”என்றார் சரிகா.
அடுத்து வருவதை வாணிக்கு சொன்னதாகவே எடுத்துக் கொள்ளலாம்.
“திருமண வாழ்க்கை ஒழுங்காக அமைய வேண்டுமானால் கணவனை மனைவி மதித்து வாழ வேண்டும்.கணவனை விட நான் மேலானவள் என்கிற அகம்பாவத்துடன் பிறர் மத்தியில் கணவனை இழிவாக நடத்திவிட்டு அதன் பிறகும் அவன் உங்களை நேசிக்கவேண்டும் என்றால் அது எப்படி நேர்மையானதாகும்?
என்னைப் பொருத்தவரை கமல்ஜியின் காலைத் தொட்டு வணங்குவதை தாழ்வானதாக கருதவில்லை.நான் மரியாதையும் அன்பும் வைத்துள்ள மாமனிதர் அவர். என்னைவிட மூத்தவர்.ஒருவருக்கு மரியாதை காட்டுவதால் நாம் தாழ்ந்து விட மாட்டோம்.”என்கிறார் சரிகா.
சரிகாவின் திருமண விருப்பத்தை கமலிடம் சொன்னதும் அவரும் சரியென ஒப்புக்கொண்டார். அவரது தந்தை சீனிவாசன் அவர்களிடம் சம்மதம் பெற்றார்.
நடிகர் திலகத்திடம் வந்து திருமணத்தை நடத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ராம்குமார்,பிரபு இவர்களுடன் சிவாஜியின் மடியில் உரிமையுடன் அமர்ந்து வளர்ந்த அன்னை இல்லத்தின் மூத்த பிள்ளை கமல்தான்.
“டே …கமலா” என்றுதான் சிவாஜி அழைப்பார். அந்த ‘டே’யில் அழுத்தம் இருக்காது.அது ஒரு ஓசை சொல்லாகத்தான் இருக்கும்.
தேவர் மகன் படத்தில் சிவாஜிதான் நடிக்கவேண்டும் என்பதில் கமல் பிடிவாதமாக நின்று 3 நாட்கள் வாதாடித்தான் சம்மதம் வாங்கினார். கால்ஷீட் வாங்கத்தான் அவரை வலியுறுத்த வேண்டியதாக இருந்தது.ஆனால் கல்யாணத்தை நடத்தி வைங்கண்ணே என்று கேட்டதும் உடனே ஒப்புக் கொண்டு விட்டார்.
கமல்ஹாசனின் இல்லத்தில் கல்யாணம்.
சிவாஜி கணேசன்,திருமதி கமலா அம்மாள்,ராம்குமார், இவரது மனைவி கண்ணம்மாள், பிரபு படப்பிடிப்பில் வெளியூரில் இருந்ததால் அவரது மனைவி புனிதவதி பிரபு ,ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.திருமாங்கல்யத்தை சிவாஜி,கமலா தம்பதி எடுத்துக் கொடுக்க கமல்ஹாசன் அதை வாங்கி சரிகாவுக்கு கட்டினார்.
மிகப்பெரிய பாக்கியம். இதைப் போல எனது மூத்த மகன் ராம்குமார்-பானுமதி திருமணத்தை சிவாஜியும் கமலா அம்மாவும் வந்திருந்து நடத்திக் கொடுத்தனர். சிங்கப்பூரில் இருந்து இந்த திருமணத்துக்காகவே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில்தான் கமல்-சரிகா இருவரும் குடும்பம் நடத்த வேண்டிய நிலை.இதை முன்னரே சொல்லி இருக்கிறேன்.
கஸ்தூரி ரங்கன் சாலையில் நடிகை ஹேமமாலினிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்தார்கள். ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்த அத்தனை பொருட்களும் எடுத்துச்செல்லப்பட்டு இருந்தன.யாரால் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
மாளிகை மாதிரி சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வாழ்ந்தபோதுதான் ஸ்ருதிஹாசன் பிறந்தார்.
ஒருநாள் திடீரென கமலிடம் இருந்து போன்.
“கொஞ்சம் வீட்டுக்கு வரீங்களா?”
உடனே புறப்பட்டு சென்றேன்.
“ஆஸ்பிடல் வரை போயிட்டு வரேன். அவங்களை ( சரிகா.) அட்மிட் பண்ணிருக்கு”என்று சொல்லிவிட்டு ஒரு வாடகைக் காரில் புறப்பட்டுப் போனார். சொந்தக்கார் அன்று அவர் வசம் இல்லை.
ஹேராம் படப்பிடிப்பில் கணவன் மனைவி இருவரும் கடுமையாக உழைத்ததை அருகில் இருந்து பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தில் நடித்தவர்களை பேட்டி எடுத்து அதை தொகுத்துக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு தரப்பட்டிருந்தது.
கலைஞன் படப்பிடிப்பின் போது ஒரு நிகழ்வு.
அதை நாளை மறுநாள் பார்க்கலாம்.
—தேவிமணி