இயக்குநர் மணிரத்னம் ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது குறித்து ஒட்டு மொத்த படக்குழுவினரும் உளம் குளிர்ந்து மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர்.
இது குறித்து பேசும்போது நடிகர் அருண் விஜய், “எனது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பிறந்த நாள் பரிசு இது. திரையுலக ஜாம்பவானான மணி ரத்னம் சார் எனது படத்தின் பர்ஸ் லுக்கை வெளியிட்டதை மிகப் பெரிய ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். அது மட்டுமல்ல, படத்துக்கே இது ஒரு சாதகமான பலம் சேர்த்திருக்கிறது. அவரது இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக எனக்கு அமைந்ததுடன் நடிப்பின் புதிய பரிமாணங்களையும் கற்றுக் கொள்ள உதவியது. கடந்த ஆண்டு பிறந்த நாள் எனக்கு எப்படி அற்புதமாக அமைந்ததோ, அதேபோல் இந்த ஆண்டும் தொட்டால் பொன்னாகும் அவரது அற்புதக் கரங்களால் ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மிகச் சிறந்த துவக்கமாக எங்கள் குழுவுக்கு அமைந்திருக்கிறது” என்றார்.
படம் குறித்து மேலும் பகிர்ந்து கொண்ட அருண் விஜய், “நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் ஒரு காவல் துறை அதிகாரியின் கோபம் எவ்வாறு தடைகளைத் தாண்டி நீதிக்காக போராட வைக்கிறது என்பதுதான் இந்தப் படம். இது பல முன்மாதிரிகளைக் கொண்டிருந்தாலும், இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் கதையை விவரித்த விதமும், இப்போது அதை படமாக்கிய விதமும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது” என்றார்.