
தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜா, பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வருகிறார்.
சென்னை சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில்தான் பாடல் பதிவு, சந்திப்புகள் என அனைத்துப் பணிகளையும் இளையராஜா மேற்கொண்டார். இந்நிலையில், ஒதுக்கப்பட்ட இடத்தில் எல்.வி. பிரசாத்தின் பேரனும் பிரசாத் ஸ்டூடியோவின் இயக்குனரான சாய் பிரசாத், கணினி உள்ளிட்ட அலுவலகப் பொருட்களை வைத்து அவருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி பிரசாத் ஸ்டூடியோஸ் நிர்வாகம் மீது இளையராஜாவின் உதவியாளர் கபார், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இளையராஜா விற்கு ஆதரவாக இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் , சுரேஷ் காமாட்சி , நடிகர் ரமேஷ் கண்ணா, உள்ளிட்ட திரைத்துறையினர் சுமார் 100பேர் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தை சந்தித்து பேச வந்திருந்தனர் .பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
எனவே அங்கிருந்த நிர்வாகத்தினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இயக்குனர் பாரதிராஜா , பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி மற்றும் சீமான் உள்ளிட்டோர் உள்ளே சென்றனர் ஆனால் அங்கு பிரசாத் ஸ்டூடியோ
நிர்வாக இயக்குநர் இல்லாத காரணத்தினால் அங்குள்ள நிர்வாகிகளை சந்தித்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா கூறியதாவது:
திரை உலகில் இசைஞானி இளையராஜாவிற்கு ஒரு சிறிய பிரச்சனை என்ற காரணத்தின் நிமித்தம் என்னுடைய வார்த்தையை கேட்டு இங்கு இவ்வளவு திரைத் துறையினர் கூடி உள்ளனர் மகிழ்ச்சி.
கடந்த 45 ஆண்டுகளாக தன்னுடைய பணிகளை இசைஞானி இளையராஜா இங்குதான் செய்து வந்தார்.
சுமூக பேச்சுவார்த்தை நடத்த தான் சென்றோம், இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் என்றால் ஒரு கால அவசாகம் வேண்டும்.
கால சூழ்நிலை காரணமாக திடீரென்று இளையராஜாவை காலி செய்ய சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு குறுகிய காலகட்டம் வேண்டும் என்று கேட்டுள்ளோம்,அந்த கால கட்டத்திற்குள் நாங்கள் இளையராஜாவிற்கு மற்றொரு ஏற்பாடு செய்வோம்.
பொறுப்பு நிர்வாகிகள் மட்டுமே உள்ளே இருந்தனர் எம்டி அவர்களை இன்னும் சந்தித்து பேச முடியவில்லை,இன்னும் மூன்று நான்கு நாட்களில் அவரை சந்திக்க உள்ளோம்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பின்னர் இளையராஜா வெளியேறுகிறார் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது அவர் இதேபோல் மற்றொரு இடத்தை கலைக்காக தேர்ந்தெடுத்து கொள்கிறார் என்பது
தான் அர்த்தம்” என்றார்….












