தமிழக சட்டப்பேரவையில் 2020-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது,உள்ளாட்சித் தேர்தல் குறித்த திமுகவினரின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்து பேசுகையில்,
“மக்களவை தேர்தலிலே, அதிகமான வாக்குகளை திமுக கூட்டணி பெற்று, அதிகமான வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அது இப்போது தலைகீழாக மாறி விட்டது.நாடாளுமன்றத் தேர்தலிலே போட்ட கணக்குப்படி கணக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தீர்கள். ஆனால் உள்ளாட்சித் தேர்தலிலே மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.ஆகவே, மக்களவை தேர்தலிலே கிராமப்புறங்களிலே எவ்வளவு வாக்குகள் வாங்கியிருக்கிறீர்கள் என்று அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் உங்களுடைய நிலை என்ன? தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது.
இன்னும் 9 மாவட்டங்கள் இருக்கிறது. அந்த 9 மாவட்டங்களிலும் அதிக அளவிலே அதிமுகவின் வேட்பாளர்கள் அதிக அளவு வெற்றி பெறுவார்கள், அதுவும் மாறத்தான் போகிறது.
மக்களவை தேர்தலிலே, கிராமப்புறத்திலே நீங்கள் அதிகமான வாக்குகளை பெற்றீர்கள். அதை வைத்து ஒவ்வொரு வேட்பாளரும் நாங்கள் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்றோம் என்று சொன்னீர்கள். அண்மையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். ஏற்கெனவே நாங்கள் திண்டுக்கல்லிலே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அதைவிட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார். என்ன ஆகியது? வேலூர் தொகுதியில் வெறும் 0.70 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். நீங்கள் பெற்ற வெற்றியை நான் மறுக்கவில்லை”இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.