நறுவி என்றால் ஒரு பெண்ணின் பெயராக இருக்கலாம். அல்லது நறு மணமிகு மலராக இருக்கலாம்.
கதாசிரியர் இயக்குநர் ராஜா முரளிதரன் எப்படி கதையை சித்தரித்திருக்கிறாரோ தெரியாது.
இந்த திரைப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
இசை அமைப்பாளர் கிறிஸ்டி பேசும்போது “சினிமா உன்னை எப்படி வேண்டுமானாலும் மாத்தும்”னு ரஞ்சித் சொன்னார்.அப்படியொரு மாற்றம் அவர் மூலம்தான் நடந்திருக்கு” என்றார்.அதாவது இந்த படத்துக்கு வாய்ப்பு ரஞ்சித் வழியாக வந்ததை அப்படி சொன்னதாக எடுத்துக்கொள்வோம்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசினால் அதில் கண்டிப்பாக நாட்டு நிகழ்வு அடி வாங்காமல் இருக்காது. அன்றும் அடி வாங்கியது.
“பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்தும் சூழ்நிலையில் இன்று நறுவி படத்தின் விழாவில் இருக்கிறோம்.. இங்கு படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றியடையணும்.இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு. தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள். இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்
இயக்குநர் ராஜா முரளிதரன் பேசியதாவது,
“எனக்கு இது முதல் மேடை. கூட்டத்தில் எனக்குப் பேச வராது. உருவம் ,சாதி அந்த மாதிரி அடையாளங்களோடு தான் என்னைப் பலரும் பார்த்தார்கள். என்னை யாருமே நம்பவில்லை. அந்த வகையில் என்னை நம்பிய துரைராஜ் அப்பாவிற்கு நன்றி. அவர் எனக்கு இன்னொரு அப்பா. நானும் ஸ்டெல்லாவும் பிரண்ட். கோவையில் வேலைப் பார்த்து சென்னைக்கு வருவேன். பரணி ஸ்டெல்லா என்ற என் இரு உயிர் நண்பர்கள் தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உடன் நின்ற அத்தனை பேருக்கும் நன்றி” என்றார்.
—