பொம்மையை வைத்து வீணை எஸ்.பாலசந்தர் ஒரு புதுவித முயற்சி செய்திருந்தார் .அதன் பரிணாம வளர்ச்சியாக வந்து நிற்கிறது கூகுள் குட்டப்பா.
ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’.
கே. எஸ். ரவிக்குமார், பிக்பாஸ் தர்ஷன், லொஸ்லியா, மற்றும் யோகி பாபு, சுரேஷ் மேனன், வளரும் நடிகன் பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு சிறப்பாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி ,ஆர் வி உதயகுமார், பேரரசு, கௌரவ் நாராயணன், பொன் குமரன், கல்யாண், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி சிவா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, ஆர் வி. உதயகுமார் பேரரசு ஆகியோர் வெளியிட, படத்தில் முக்கிய வேடத்தில் இடம்பெற்றிருக்கும் ரோபோ மேடையில் தோன்றி பெற்றுக்கொண்டது.ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கே எஸ் ரவிக்குமார் பேசுகையில் “இயக்குனராக, நடிகராக இருந்த என்னை ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் தான் ‘தெனாலி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கினார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிதும் உதவி புரிந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கூகுள் குட்டப்பா’ படத்தை தயாரித்திருக்கிறேன்.
என்னிடம் உதவியாளராக பணியாற்றும் சரவணன் மற்றும் சபரி கிரிசன் ஆகியோருக்காக மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி, ‘கூகுள் குட்டப்பா’வை உருவாக்கி இருக்கிறோம். என்னுடைய உதவியாளர்களாக இருந்தாலும், படப்பிடிப்பின்போது என்னை தயாரிப்பாளராக பார்க்காமல் நடிகராக வேலை வாங்கினார்கள் . 
நாயகி இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பணியாற்றும் பெண்ணாக ஏன் இருக்கக் கூடாது? என்று கேட்டவுடன், இலங்கையில் பிறந்து தமிழை அழகாக பேசும் பிக் பாஸ் லொஸ்லியாவை படத்தின் நாயகியாக்கினோம்.
‘கூகுள் குட்டப்பா‘ படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், விக்ரமனின் வாரிசு கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் படத்தை தயாரிக்கிறேன். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகும். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் வெளியீட்டு தேதியும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” என்றார்.
படத்தின் இயக்குநர்கள் சபரி கிரிசன் மற்றும் சரவணன் பேசுகையில், ” நானும் சரவணனும் நண்பர்கள். ஒரே அலைவரிசையில் சிந்திக்கக்கூடிய தோழர்கள். அதனால் இணைந்து ஒரு படத்தை இயக்குவோம் என தீர்மானித்தோம். நாங்கள் இருவரும் ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ படத்தைப் பார்த்தபோது உண்மையில் வியந்தோம். இதனை தமிழில் ரீமேக் செய்யவும் தீர்மானித்தோம். முக்கியமான அந்த முதியவர் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்தபோது, சட்டென்று எங்களுடைய குருநாதர் கே எஸ் ரவிக்குமார் நினைவுக்கு வர, அவர் முன் நின்றோம். தமிழுக்காக என்னென்ன மாற்றங்கள் செய்து இருக்கிறீர்கள்? என கேட்டபோது, நாங்கள் செய்த மாற்றங்கள் குறித்து விவரித்தோம். உடனடியாக படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறிவிட்டார். அப்படித்தான் ‘கூகுள் குட்டப்பா’ தயாரானது. “என்றார் .
யோகி பாபு காமெடியாக மட்டும் நடிக்காமல், சிறந்த குணச்சித்திர வேடத்திலும் நடித்திருக்கிறார். புதுமுக இயக்குநர்கள் என்றும் பாராமல் அவர் அளித்த ஒத்துழைப்பு மறக்க இயலாதது. என்று யோகிபாபாவையும் நினைவில் கொண்டனர்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,” பொதுவாக மனிதருக்கும், செல்லப் பிராணிகளுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு இயந்திரத்திற்கும், மனிதருக்கும் இடையே உள்ள உறவு என்பது வித்தியாசமானது. இலக்கணத்தில் இயந்திரம் ஒரு அஃறிணை பொருள். ஆனால் இந்த படத்தில் அது ஒரு உயிருள்ள பொருளாக இடம்பெற்றிருக்கும். இதனை பாடல் வரிகளில் ‘ … இதனை இனிமேல் இவன் என்பாயோ..’ என குறிப்பிட்டிருக்கிறேன். இதனை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், ஜிப்ரானின் இசையும் உயிர்ப்புள்ளதாக இருக்கும். மேலும் இந்தப் படத்தில் எழுதிய ‘ ஈழத்து பூங்காற்றே..’ என்ற பாடல் வரிகளுக்காக கவிப்பேரரசு வைரமுத்து என்னை அழைத்து பாராட்டு தெரிவித்தார். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் கே.எஸ் ரவிக்குமார் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.” என்றார்.மகனை அப்பா பாராட்டுவது பெரும்பாலும் நிகழ்வதில்லை.ஆனால் கார்க்கியின் ஈழத்துக்காதல் வாழ்த்துகளை வாங்கித்தந்திருக்கிறது.
விழா என்றால் இனிமேல் பேச்சாளர்கள் பெருமளவில் இருப்பார்கள் என்பதற்கு அடையாளமாக இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் அதிகமாக காணப்பட்டார்கள்.
இனிமேல் இப்படித்தான் இருக்குமாம் குஞ்சப்பன் சொல்றான்.!












