எழுத்தாளரும் டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவருமான தமிழ்க்காரி சித்ரா எழுதி அந்தரி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘திருக்குறள் 3.O’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 2500 வருடங்களுக்கும் மேலான தொன்மைவாய்ந்த திருக்குறளுக்கு இது வரையில் பெண்கள் யாரும் முழுமையாக உரை எழுதாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், திருக்குறளுக்கு முழுமையாக உரை எழுதிய முதல் பெண் படைப்பாளி என்ற பெருமையை பெரும் தமிழ்க்காரியின் ‘திருக்குறள் 3.0’ புத்தகத்தை திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டார்.
நூலை வெளியீட்டு வாழ்த்துரை வழங்கிய சுபவீ பேசியதாவது:-
“இன்றைக்கு திருக்குறளை தொழிநுட்ப வளர்ச்சியோடு இணைத்துப் பார்க்கும் காலம் வந்து விட்டது. ‘திருக்குறள் 3.O’ நூலில் இடம் பெற்றிருக்கும் ஓவியங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் வரையப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்களை, விளைவுகளை கொண்டுவருமோ என்ற அச்சம் இருக்கிறது. ஒருமுறை நான் மலேசியா சென்றிருந்தபோது, ஓட்டுநர் இல்லாத ரெயிலில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
எல்லாவற்றையுமே செயற்கை நுண்ணறிவு பார்த்துக் கொள்ளுமேயானால் வாழ்க்கை முறையும் உலகமும் எப்படி மாறிப் போகும் என்ற ஆர்வமும் கவலையும் ஒருசேர ஏற்படுகிறது. இதனால் சில சிக்கல்களும் நம் வாழ்க்கையில் நேரக்கூடும். இந்த நூலில் தமிழ்க்காரி, திருக்குறள் பற்றி சொல்லியிருக்கும் இரண்டு சொற்கள் என்னைக் கவர்ந்தன. அதாவது அவரது முன்னுரையில், “திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்” என்று எழுதி இருக்கிறார். இது சரியான பார்வையாக எனக்குத் தோன்றுகிறது.
நம்மில் பலர் இயந்திரங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயந்திர வாழ்க்கை வாழும் போது மனநலத்திற்கான சிக்கல் வருகிறது. பெரும்பாலான நாடுகளில் மனநல மருத்துவர்களுக்கான தேவை அதிகமாகி இருக்கிறது. அந்த இடத்தில், மனநல மருத்துவராக திருக்குறள் செயல்படுகிறது என்று சொல்லும் தமிழ்க்காரி, முன்னுரையில் “சில இடங்களில் வள்ளுவர் அன்பாக பேசுகிறார்; சில நேரங்களில் கடுமையாக பேசுகிறார்; சில நேரங்களில் கடிந்துகொள்கிறார் என்று குறிப்பிடுகிறார்.
ஒவ்வொரு வாழ்க்கைக்கும்; இவ்வொரு வயதுக்கும்; ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ற அறங்களை சொல்லி இருக்கும் நூல் திருக்குறள். இதற்கு உரை எழுதியிருக்கும் தழிழ்க்காரி சித்ராவை வாழ்த்துகிறேன்” என்றார்.
நிறைவாக ஏற்புரை நிகழ்த்திய நூலாசிரியர் தமிழ்க்காரி சித்ரா பேசியதாவது:- “எங்கோ ஒரு கிராமத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியவள் நான். அல்லது கதைகளை படித்துக் கொண்டிருப்பேன்; அல்லது ஆசிரியராக ஒரு பள்ளிக்கு சென்றுக் கொண்டிருப்பேன். ஆனால் சிறுவயதிலேயே எனக்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாட்டை இரண்டு முறை தடுத்து நிறுத்தி நான் இந்த நிலைக்கு வளர்ந்திருப்பதற்குக் காரணம் என் அம்மாதான். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல முடியாது; மாறாக வாழ்க்கை முழுவதும் அவருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன். முதலில் திருக்குறளுக்கு உரை மட்டும் எழுதலாம் என்று முடிவு செய்தபோது, ரமேஷ்குமார் அண்ணன் தான் ஹைக்கூ மாதிரி எழுது என்றார். நிறைய முயற்களுக்குப் பிறகு, பலமுறை திருத்தங்கள் செய்து ஒருக்கட்டத்தில் ‘திருக்குறள் 3.0’வாக இப்போது வெளியாகி இருக்கிறது. திருக்குறளுக்கு முழுவதுமாக உரை எழுதி இருப்பதோடு, மூன்று வரிகளில் அனைத்து திருக்குறள்களையும் சின்னஞ்சிறு குறுங்கவிதைகளாக மூன்று வரிகளில் எழுதியிருக்கிறேன்”. இவ்வாறு அவர் பேசினார் .












