விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஆர்.எக்ஸ். 100’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் அஜய் பூபதி ‘செவ்வாய்கிழமை’ என்ற ரஸ்டிக் திரில்லர் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரிக்கும் இப்படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ரீதேஜ், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லட்சுமண் மற்றும் பலர்.நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்கிறது படக்குழு.
இது குறித்து இயக்குநர் அஜய் பூபதி கூறுகையில்,”திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் புதுமையாக இருக்கும். யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற எளிய கேள்விகளுக்கு கூட எளிதில் பதில்களைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரும் இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத்தின் கதாபாத்திரம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். திரையரங்குகளில் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் வித்தியாசமான ஆச்சரியத்தை அனுபவிப்பார்கள். ” என்கிறார்.
தயாரிப்பாளர்கள் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா கூறுகையில், “ஆர்எக்ஸ் 100′ படத்தின் மூலம் அஜய் பூபதி ஒரு புதிய டிரெண்டை உருவாக்கினார். இப்போது இவரது ‘செவ்வாய்கிழமை’ ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம் இது. இந்தியத் திரையில் இதுவரை பார்த்திராத ஒரு படத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார். நவம்பர் 17ஆம் தேதி பார்வையாளர்களும் இதனை உணர்வார்கள். படத்தை 99 நாட்கள் படமாக்கினோம், அதில் 51 நாட்கள் இரவு நேர படப்பிடிப்புகள். இது உயர்தர தொழில்நுட்பம் கொண்ட படம். ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளராக பிரபலமான அஜனீஷ் பி லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறோம்” என்றனர். மேலும், படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.












