எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் பேசியதாவது,
“இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றி தமிழ் நாடு மட்டுமல்ல ஊர் உலகமே அறிந்த ஓர் விஷயம். மக்களுக்காக அவர் பாடுபட்டு , மக்களுக்காக அவர் செய்த விஷயங்களை இன்று வரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இன்று நடிகர் சங்கம் முன்னால் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். எம்.ஜி.ஆர் அவர்களின் செயல்பாடு போல் நாமும் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் முடிந்த அளவுக்கு நான் இன்று சமூக பணியாற்ற உந்துதலாக இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான். கிட்டத்தட்ட ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து சமூக வலைதளங்களில் விஷால் ஜல்லிகட்டுக்கு எதிராக பேசினார் , பீட்டாவை ஆதரிக்கிறார் என்று கூறிவருகிறார்கள். பீட்டாவின் முழு அர்த்தம் எனக்கு தற்போது தான் தெரிந்தது. பீட்டாவை நான் ஆதரிக்கவில்லை , பீட்டாவுக்கு நான் விளம்பர தூதரும் இல்லை. இதை போன்று புரளியை பரப்புவது தவறான ஒன்றாகும். நான் ஒரு கருத்து சொல்வதென்றால் மைக் பிடித்தோ , பத்திரிகைகள் மூலமாகவோ அல்லது என்னுடைய சமூக வலைதளத்தின் மூலமாகவோ நேரடியாக நான் கூறியிருப்பேன். ஜல்லிக்கட்டை நான் ஆதரிக்கிறேன். ஜல்லிக்கட்டு அடுத்த வருடம் முறையாக நடக்க நானும் களத்தில் இறங்கி போராடுவேன், ஜல்லிக்கட்டு நடக்க தனிப்பட்டமுறையில் முயற்சி செய்து வருகிறேன். விஷால் ஜல்லிகட்டை ஆதரிக்கிறார் என்றால் அதை அவர் நேரடியாக கூறினால் தான் அது உண்மையான ஒரு செய்தியாகும். சமூக தளங்களில் உள்ள யாரோ ஒருவர் கூறும் தவறான செய்தி உண்மையான ஒன்றாகாது. இங்கே இளைஞர்கள் போராடுவது கண்டிப்பாக மத்தியில் உள்ள அரசுக்கு கேட்டிருக்கும். கண்டிப்பாக அடுத்த வருடம் ஜல்லிக்கட்டு முறையாக நடக்க மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். நடிகர் சங்கத்துக்கும் பீட்டாவுக்கும் எந்த வித சமந்தமும் இல்லை இதை நான் நடிகர் சங்க பொது செயலாளராக கூறி கொள்ள விரும்புகிறேன் என்கிறார்.