
வடசென்னை, காசிமேடு பகுதியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையில், மருத்துவராக பணிபுரிந்து வருபவர், (தங்கம்) தான்யா ரவிச்சந்திரன். இவர் மிகவும் நேர்மையானவர். நோயாளிகளை பரிவுடன் கவனித்து சிகிச்சையளித்து வருகிறார்.
சர்வ அரசியல், அதிகார பலம் பொருந்தியவர் (கே. பாக்யராஜ்) லிங்கம். இவரது மகள் விபத்து ஒன்றில் உயிரிழந்த நிலையில், தான்யா ரவிச்சந்திரனின் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறார். போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு தயாராகிறார், டாக்டர் தங்கம். இதை அறிந்து கொள்ளும் லிங்கம், உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் தன்னிடம் கொடுக்குமாறு கேட்கிறார். அதற்கு அவர் மறுக்கிறார். அதோடு போஸ்ட் மார்ட்டமும் செய்யப்படுகிறது. இந்த விஷயம், லிங்கத்தின் விசுவாசியும், சென்னையின் மிகப்பெரிய ரௌடியாகவும் இருக்கும் (டேனியல் பாலாஜி) அர்னால்டு, டாக்டர் தங்கத்தை மிரட்டுவதுடன் அவருடன் இருப்பவர்களையும் மிரட்டுகிறார். தங்கம் (தமிழ்) காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கிறார். அவர், அர்னால்டை கடுமையாக எச்சரிக்கிறார். இதன் காரணமாக அர்னால்ட், காவல் துறை ஆணையரை கொலை செய்கிறார். அடுத்து, டாக்டர் தங்கத்தின் உடனிருப்பவர்களை கொலை செய்கிறார். இதையடுத்து டாக்டர் தங்கத்தின் நிலை என்ன ஆனது? என்பது தான், ‘பிபி 180’ திரைப்படத்தின் சுவாரசியமற்ற திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
மொத்த படமும் தான்யா ரவிச்சந்திரனை சுற்றியே நகர்கிறது. அவரே படத்தின் பிரதானம். கொடியவர்களை எதிர்கொள்ளும் ஒரு தைரியமிக்க பெண்ணாக, நோயாளிகளை கனிவுடன் நடந்து கொள்ளும் மருத்துவராக, டாக்டர் தங்கம் கதாபாத்திரத்தில், தன்னால் முடிந்தவரை, அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்.
ரௌடி அர்னால்டு கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி. அவருடைய நடிப்பு பாராட்டும்படி இருந்தாலும், அவருடைய கதாபாத்திரத்தின் ஓவர் பில்டப்பால், அந்த நடிப்பினை ரசிக்கமுடியவில்லை.
இயக்குநர் கே.பாக்யராஜின் கதாபாத்திரம் பலமிக்கதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அது டேனியல் பாலாஜியின் வருகைக்கு பிறகு டம்மியாகிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பை நேர்த்தியாக காட்டவில்லை. இது, ரசிகர்களிடம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அருள்தாஸ், தமிழ், ஜாக் அருணாச்சலம், ஸ்வேதா டோரத்தி, ரங்கா, நயனா ஆகியோர் தங்களால் முடிந்தவரை நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் திரைப்படத்தை கொஞ்சம் சுவாரசியப்படுத்துகிறது. எழுதி இயக்கியிருக்கும் ஜெ.பி, திரைக்கதையிலும், கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறார்.
சென்னை காவல் ஆணையாளரை, புத்திசாலித்தனம் மிக்கவராகவும், கண்டிப்பானவராகவும் காட்சிப்படுத்திவிட்டு, அவரை காலில் கயிற்றை கட்டி கடலுக்குள் இழுத்து செல்வது. அதன்பிறகு காவல் துறை நடந்து கொள்ளும் விதமெல்லாம், அபத்தமோ.. அபத்தம்.
என்ன தான் கற்பனை என்றாலும், ஒரு நியாயம் வேண்டாமா, இயக்குநர் ஜெபி சார்?
‘பிபி 180’ (BP180) – காவல் துறைக்கு களங்கம்!












