‘ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ’ மற்றும் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனங்கள் சார்பில், கார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், 29. இதில், விது, ப்ரீத்தி அஸ்ராணி, அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன், சிந்து ஷியாம், பிரேம்குமார், ஆதிரா பாண்டிய லட்சுமி, ஆறுமுகவேல் , ஷெனஸ் பாத்திமா , ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப், அனுஸ்ரீவேலன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். எழுதி, இயக்கியிருக்கிறார், ரத்னகுமார்.
29 வயது காலக்கட்டத்தில், ஒரு வாலிபனின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணங்களே, 29 திரைப்படத்தின் கதை. விவசாயக் குடும்பத்தினை சேர்ந்த வாலிபர் (விது) சத்யா, சொந்த ஊரில் போதிய வேலைவாய்ப்பின்றி சென்னையில் வேலை பார்த்து வரும் அவர், குறிக்கோள் அற்ற எதிர்காலத்தை நோக்கி பயனித்து வருகிறார். அவரது அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் இளம் பெண் (ப்ரீத்தி அஸ்ராணி) விஜி. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு பயனித்து வருகிறார். இவர்கள் இருவரும் முதல் முறையாக சந்தித்துக்கொள்ளும் சில தினங்களிலேயே நெருக்கமான நட்பும், அதன் பிறகு காதலும் கொள்கின்றனர். நாட்கள் செல்லச்செல்ல இவர்களிடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. பல தருணங்களில் போதிய புரிதலும், லட்சியமற்ற சத்யாவின் எதிர்கால வாழ்க்கை முறையும் விஜியை கவலைக்குள்ளாக்குகிறது. இதன் காரணமாக இருவரும் பிரிகின்றனர். சத்யாவை மறக்க முடியாத விஜி, ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார். விஜியை மறக்க முடியாமல் சத்யா தவிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘29’ திரைப்படத்தின் திரைக்கதை.

‘29’ படத்தின் கதை, 2003 ஆண்டிலிருந்து 2009 ஆண்டு வரை சித்தரிக்கப்பட்டுள்ளதாக, சில காட்சிகள் இடம் பெறுவதை யூகித்து கொள்ள முடிகிறது. கிட்டத்தட்ட 2.30 மணி நேர, நிமிடங்கள் இடம் பெறும் காட்சிகளில், கிளைமாக்ஸை நெருங்கும் ‘45’ நிமிடக் காட்சிகளே ரசிக்கும் படி இருக்கின்றன. மற்ற காட்சிகள் சுவாரசியமின்றி, நாடகத்தன்மையுடன் இருப்பதால் ரசிக்க முடியவில்லை.
காதலியை மட்டும் சுற்றிவரும், லட்சியமற்ற சராசரி இளைஞன் சத்யாவாக விது நடித்திருக்கிறார். நடிப்பதற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. என்றபோதும் குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் க்ளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில்.
விஜயலட்சுமி என்கிற விஜியாக நடித்திருக்கிறார், ப்ரீத்தி அஸ்ராணி. நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இடைவேளைக்கு பின்னரே இவரது காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. இவர், விதுவிடம் பீச்சில், பூ வாங்கித்தரச்சொல்லும் காட்சி, அக்மார்க் நாடகத்தனமான அலுப்பூட்டும் காட்சி.
ஓகேவான நடிப்புடன், ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன். மற்றபடி ஆதிரா பாண்டியலக்ஷ்மி, சிந்து ஷியாம், பிரேம்குமார், ஆறுமுகவேல், ஷெனஸ் பாத்திமா, எஸ்ஏ சதீஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப் , அனுஸ்ரீவேலன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு… பாடல், காட்சியோடு பார்க்கவும், தனித்து கேட்கவும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை, குறை சொல்லும்படி இல்லை.
எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், சொல்ல வந்ததை சரியாக சொல்லமுடியாமல், முரண்பட்ட வசனங்களோடு துண்டு துண்டான காட்சிகள் மூலம் சொல்லியிருக்கிறார். அது ரசிக்கும்படி இல்லை.
மொத்தத்தில் ‘29’ ரசிக்கவில்லை!












