மதுரையைச் சுற்றியிருக்கிற மக்கள் மட்டுமின்றி, பல மக்களுக்கு இன்றுவரை தீராத வழக்குகளை எல்லாம் தீர்த்து வைக்கும் காவல் தெய்வமாக, மதுரை அழகர் மலையில் வீற்றிருக்கும் தெய்வம் கருப்பு. குடும்ப பிரச்சனை, சமூக பிரச்சனை என அனைத்தையும் தீர்த்து வைப்பார், என இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. இதை பிரதிபலிக்கும்படியாக உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான், கருப்பு.
இதில் சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே. பாலாஜி , மலையாள நடிகர் இந்திரன்ஸ், நட்டி – நட்ராஜ், சுவாசிகா , ஷிவதா, ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், நமோ நாராயணா, வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வில்லனாக நடித்திருப்பதுடன் எழுதி இயக்கியிருக்கிறார், ஆர். ஜே. பாலாஜி. ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ‘ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்’ சார்பில், எஸ் .ஆர். பிரகாஷ் பாபு , எஸ். ஆர். பிரபு தயாரித்துள்ளனர்.
இந்திரன்ஸ் கேரளாவிலிருந்து தனது மகள் அனகா மாயாவின் உயிர் காக்கும் சிகிச்சைக்காக சென்னை வருகிறார். மருத்துவ செலவுக்காக 60 பவுன் நகையை எடுத்து வருகிறார். அப்போது அது திருடு போகிறது. இதனால், மீட்டுக்கொடுக்கும்படி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். காவலர்கள் திருடர்களிடமிருந்து 45 பவுனை மீட்கின்றனர். அதை கோர்ட் மூலம் பெற்றுக் கொள்ளும்படி சொல்கின்றனர். கோர்ட்டில் செல்வாக்குமிக்க வழக்கறிஞர் ஆர். ஜே. பாலாஜியின் கண் அசைவில் மொத்தக் கோர்ட்டும் செயல்பட்டு வருகிறது. இந்திரன்ஸ் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மனம் வெறுத்துப்போகும் இந்திரன்ஸ் கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பசாமி சிலையிடம் வேண்டுகோள் வைக்கிறார். அதன் பிறகு கருப்பசாமியாக சூர்யா இந்திரன்ஸ் வழக்கை கையில் எடுக்கிறார். அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆர். ஜே. பாலாஜியை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் கதாநாயகன் அவராகவே தெரிகிறார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சூர்யாவுக்காக எழுதப்பட்ட காட்சிகளில் போதிய அழுத்தம் இல்லை. இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது.
பேபி கண்ணன், என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, படம் முழுவதும் வலம் வருகிறார். நாயகனுக்குரிய அறிமுக காட்சிகளுடன் அவரை முன்னிலைப்படுத்தும் காட்சிகளில் சில மட்டும் ரசிக்க வைக்கின்றன.
வழக்கறிஞராக நடித்திருக்கும் திரிஷா, சில காட்சிகளிலும் வந்து போவதோடு பாடல் காட்சியில் ஆட்டமும் போடுகிறார்.
நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, ஷிவதா போன்றோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. கண்களை உறுத்தும் சிவப்புக்கலரை குறைவாக பயன்படுத்தியிருக்கலாம். மற்றபடி ஓகே! ஒவ்வொரு காட்சியிலும் பிதுங்கி வழியும் கூட்டம்! அது, திரைக்கதைக்கு படு செயற்கையான காட்சிகளாக இருக்கிறது. சண்டை காட்சிகளில் இடம்பெறும் கிராபிக்ஸும் உறுத்தலாக இருக்கிறது.
இந்தப்படத்தின் மூலமாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அறிமுகமாகியிருக்கிறார். பெரிதாக ஈர்க்கவில்லை.
எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, நீதித்துறையில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்ட முயற்சித்திருக்கிறார். இயக்குவதை விட நடிப்பதில் அவரது அக்கறை வெளிப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. நேர்த்தியற்ற திரைக்கதையும், சுவாரசியமற்ற காட்சிகளும் படத்தின் பலவீனம்.
கருப்பு – கட்டிப் போடப்பட்டிருக்கிறது!












