சில வாரங்களுக்கு முன்னர் நடை பெற்ற நீட் தேர்வு (NEET – National Eligibility cum Entrance Test) முறைகேடு, இந்தியா முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி மிகப்பெரும் பேசுபொருளாக ஆகியிருப்பது அனைவரும் அறிந்ததே. அது போன்ற சம்பவத்தினை அதாவது அரசு நடத்து TNPSC – UPSC போன்ற தேர்வுகளில் நடக்கும் மோசடிகளை தனது கற்பனை கலந்து, எழுதி இயக்கியிருக்கிறார், ஏ. சற்குணம். இந்தத்தொடரில், துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் அதிதி பாலன், அப்பாஸ், நரேன் மணி, துரை சுதாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘எக்ஸாம்’ – இணையத்தொடர், அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) வெளியாகியிருக்கிறது.
உதகம் மலை, ‘தைக்காரா’ பகுதிக்கு ‘டிஎஸ்பி’ யாக புதிதாக பொறுப்பேற்க காட்டுப்பகுதிக்குள் தனியாக ஜீப்பில் பயணிக்கிறார், அதிதி பாலன். அப்போது, துஷாரா விஜயன் அவரைக் கடத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, அவரது பதவியில் ஆள்மாறாட்டம் செய்து பொறுப்பேற்கிறார். அந்தப்பகுதியில் நடக்கும் போட்டித்தேர்வில் சதி நடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது துஷாரா விஜயனுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன செய்தார்? அதிதி பாலனை கடத்தி, ஏன் ஆள்மாறாட்டம் செய்தார்? என்பது தான், ‘எக்ஸாம்’ இணையத்தொடர்.
‘எக்ஸாம்’ ஒரு விறு விறுப்பான க்ரைம் த்ரில்லர். என்பதை முதல் பகுதியிலேயே சொல்லப்பட்டு விடுகிறது. ஏழு பகுதிகளைக் கொண்ட இந்தத் தொடர், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை, சிறிதும் சோர்வில்லாமல் அடுத்தடுத்த பகுதிகளில் விறுவிறுப்பு சேர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படி அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் காட்சிகள் பரபரப்பாக செல்கிறது. ஒரு சில இடங்களில் குறைகள் இருந்தாலும் அது பெரிதாக தெரியவில்லை.

இந்தியாவில் அரசாங்க பணிகளுக்காக நடக்கும் போட்டித்தேர்வுகளில், முறைகேடு சர்ச்சை குறித்த செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருப்பதை செய்திகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கு அண்மையில் நடந்த நீட் தேர்வு (NEET – National Eligibility cum Entrance Test) குறித்த பத்திரிக்கை செய்திகளே சாட்சி.
ஜான்சி, கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் சிறப்பாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் தனிக்கவனம் பெறுகிறார். அவரைப் போலவே மரமல்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலனும் நன்றாகவே நடித்திருக்கிறார். அப்பாஸ், நரேன் மணி , துரை சுதாகர் உள்ளிடோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
க்ரைம், த்ரில்லருக்கான சாம் சி.எஸ் பின்னணி இசை, காட்சிகளுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. முதல் மூன்று தொடர்களை போல் அனைத்தும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், ‘எக்ஸாம்’ – விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!












