ஜெய் , மீனாட்சி கோவிந்தராஜன், சரவண சுப்பையா , கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், ’சட்டென்று மாறுது வானிலை’. பாபு விஜய் எழுதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு, ரிச்சர்ட் எம் நாதன். இசை, கிரிஷ் பாலகிருஷ்ணன்.
அமைச்சரின் மகள் மீனாட்சி. அவரை, ஐடியில் வேலை பார்க்கும், நடிகர் விஜய்யின் பரம ரசிகரான ஜெய் காதலிக்கிறார். இது அமைச்சருக்கு பிடிக்கவில்லை. அவர்களை பிரிக்க நினைக்கிறார். எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். தேனிலவுக்கு கொடைகாணல் செல்ல்லும் அவர்கள் கருடா ராமுக்கு சொந்தமான ஹோட்டலில் தங்குகின்றனர். மீனாட்சி காணாமல் போகிறார். அதோடு கொடைகாணலில் மர்மமான முறையில் சிலர் கொல்லப்படுகின்றனர். காதல் மனைவியைத்தேடி ஜெய் அலைகிறார். அவர் கிடைத்தாரா? என்பது தான், ’சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தின் கதை.
நடிகர் விஜய்யின் பரம ரசிகனாக நடித்திருக்கிறார், நாயகன் ஜெய். அனைத்து காட்சிகளிலும் விஜய்யை இமிடேட் செய்து நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், கதலிக்காக கண்ணீர் விடும் காட்சிகளிலும் நிறைவான நடிப்பினை கொடுத்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கிறார், மீனாட்சி கோவிந்தராஜன். அழகிலும், நடிப்பிலும் குறைவில்லை. திறமையை வெளிக்காட்ட ஏராளமான காட்சிகள் அனைத்திலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
ஒரே அலுவலகத்தில் வேலைபார்க்கும், ஜெய்யின் நண்பராக நடித்திருக்கிறார், யோகி பாபு. வழக்கமான சலிப்பூட்டும் காட்சிகள். சிரிப்பும் வரவில்லை. சீரியஸூம் வரவில்லை. ரசிகர்களுக்கு ஏமாற்றம். ஆறுதலாக ஆதித்யா கதிர். சில இடங்களில் பரவாயில்லை, சிரிக்க வைக்கிறார். மற்றபடி வில்லனாக கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா போன்றோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு பரவாயில்லை. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை சுமார்.
எழுதி இயக்கியிருக்கும் பாபு விஜய், ஹோட்டலில் நடக்கும் சைபர் குற்றங்களையும் அதன் பின்னணியையும் வைத்து ஒரு கமர்ஷியல் படத்தினை கொடுக்க முயற்சித்துள்ளார். அதை இன்னும் சுவாரசியமாக கொடுத்திருக்கலாம்.
‘சட்டென்று மாறுது வானிலை’. – சுமார்!












