
மதில் !
ஓடிடி தளத்தில் வெளியாகிய படம்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ,காத்தாடி ராமமூர்த்தி ,லொள்ளு சபா சாமி நாதன் ,ஜாங்கிரி மதுமிதா ஆகியோருடன் மைம் கோபி முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார்
ரவிகுமார் லட்சியத்துடன் கட்டிய வீடுதான் கதையின் மய்யப்புள்ளி. அதென்ன லட் சியம்யா, ஒவ்வொருவனும் ஒவ்வொரு லட்சியத்துடன்தான் வாழ்கிறான் என்று கேட்கிறவர்களுக்கு “அய்யா ,பள்ளி மாணவனாக ரவிகுமார் இருந்தபோது அப்பா இறந்து விடுகிறார். வீட்டுக்காரன் பிணத்தை வீட்டுக்குள் வைக்கக்கூடாது.,புதிதாக கட்டி 3 மாதம் கூட ஆகல .எழவெடுக்கவா வீடு கட்டிருக்கிறேன் “என சொன்னதால் பிணத்தை வீதியில் வைத்திருக்கிறார்கள் ,மழையில் பிணம் நனைகிறது.”அப்போதைய மாணவன் ரவிகுமார் மனதில் உருவாகியதுதான் சொந்த வீடு. இதுதான்யா லட்சியம்.
அது நனவாகியதால் கட்டப்பட்ட வீட்டுக்கு என்னனென்ன கஷ்டங்கள் ஓர் அரசியல்வாதியால் வருகிறது ,அதை எப்படி ஆசிரியராக இருந்த ரவிகுமார் சமாளிக்கிறார் என்பதுதான் கதை.
வீட்டின் சுவர்களில் தேர்தல் விளம்பரம் எழுதக்கூடாது என்பது தேர்தல் கமிஷனின் தெளிவான உத்திரவு. மீறி எழுதினால் அந்த வேட்பாளருக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதும் ,இதில் போலீசின் கடமை என்ன என்பதை எப்பவோ சொல்லிவிட்டார்கள். தற்போது தேர்தலில் யாரும் சுவர் விளம்பரங்கள் எழுதுவது இல்லை.
ஆனால் என் சுவர் எனது உரிமை என்கிற முழக்கத்துடன் சுவர் விளம்பர பிரச்னையை படு சூடாக சொல்லியிருக்கிறார்கள். பெண்ணின் பிறப்புறுப்பை பச்சையாக சொல்லி ஒடி டி தளம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று அவர்களாகவே உருவாக்கியிருக்கிற விதியை அமல் படுத்தியிருக்கிறார்கள்.
வெப் சீரியல் ,ஓடிடி என்றால் ஆபாசம் ,ப்ளூ பிலிமே பெட்டர் என சொல்லக்கூடிய அளவுக்கு கலாசாரத்தையே சீரழிக்கிற முயற்சியில் அரசுக்கும் ஆர்வம் இருக்கிறது என்பதை இந்த மதிலும் சொல்லிவிட்டது..பச்சை படுக்கை அறைக்காட்சிகளும் பணம் காய்ச்சி மரங்கள். அந்த அளவுக்கு மனிதர்கள் காமத்துடன் அலைகிறார்கள் என்று சொன்னாலும் பிழையில்லை.
பொதுவாக வேட்பாளர்களில் பெரும்பாலோர் குற்றப்பின்னணி உள்ளவர்கள்தான்.என்பதை மைம் கோபி கேரக்டர் வழியாக உறுதி செய்திருப்பதை பாராட்டலாம். மைம் கோபி சிறந்த நடிகர். எந்த படத்திலும் மேன்மையான நடிப்பினை தந்திருக்கிறார் என்றே சொல்லலாம். படங்கள் தவறு செய்திருக்கலாம் ஆனால் அவரது நடிப்பில் சிறப்பு சிதைந்ததில்லை.
கதையை பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. சுவர் விளம்பரம் என்பது பற்றி முன்னரே சொல்லியாகிவிட்டது.
ஆனால் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமாரை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. மொத்த கதையையும் சுமக்கிற ஒற்றை ஆள். இவரது இயக்கத்தில் வெளியாகிய 90 சதவீத படங்கள் ஏன் வெற்றி பெறுகின்றன என்பதற்கு விடை இந்த மதிலில் இருக்கிறது. ஒரு சிறந்த நடிகன் இந்த இயக்குனருக்குள் இருந்து கொண்டு உதவுகிறான்.
பெண் உறுப்பை சொல்லி இவரை மைம் கோபி திட்டுகிறபோது கண்ணிமைக்கும் நேரத்தில் உடைந்து போகிறார்.அந்த மொத்த காட்சியிலும் அவர் அடைகிற வேதனை ,சிறுமையின் வெளிப்பாடு ,செத்துப்போகிற சினம் ..அடடா அற்புதம் ரவிகுமார் !
மற்ற நடிகர்களான காத்தாடி ராமமூர்த்தி ,லொள்ளு சபா சாமிநாதன் ,மதுமிதா ஆகியோர் இன்னமும் காலி யாகாத பெருங்காய டப்பாக்கள்தான்.!
எக்ஸ்பைரி டேட் தீர்ந்து போன மருந்துகளால் எதிர்விளைவுகள்தான் நடக்கும் இயக்குநர் மித்ரன் ஜவகர் அவர்களே!












