“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி”— தங்கப்பதக்கம் படத்தில் சோகத்தில் முக்கி எடுத்து நம்மை கலங்கடித்தப் பாட்டு. அண்ணன் நடிகர்திலகம் சிவாஜி பின்னி எடுத்திருப்பார் . பிரமீளாவும் தாக்குப் பிடித்து நடித்திருப்பார்.
இதே மாதிரியான காட்சி ‘கிளாஸ் மேட்ஸ்’ படத்தில் உங்களை உலுக்கி விட்டதா என்று அவசரப்பட்டு கேட்டு விடாதீர்கள். அந்த பாடல் வரிகளின் அர்த்தம் நம் மென்னியை திருகிய உணர்வு படம் பார்த்தபோது ஏற்பட்டது !! அடிக்கடி வந்தது.!அதனால்தான் அந்த வரிகள்.!
குடியின் தீமையை எடுத்துச் சொல்ல வந்த அங்கயர்க் கண்ணன் ,டைரக்டர் சரவண சக்தி இருவரும் கதை முழுமையும் வந்து ,திரையை ஆக்கிரமித்து வாசித்து விட்டார்கள். கதையின் பூர்வாசிரமம் அன்றைய முகவை மாவட்டம் . அதாவது இராமநாதபுரம் மாவட்டம்.
குடியின் கொடுமையை சொல்வதாக சொல்லிக்கொண்டு பாட்டில்களுடன் படம் முழுவதும் யாத்திரை செய்கிறார் இயக்குநர். குடிகார கூமுட்டைகள் திருந்துவதற்கு தகுந்த காட்சிகள் இருக்கிறதா என்றால் எல்லாமே காமடியாக கரைகிறது.
ஒரு கட்டத்தில் ‘நல்லவர்’ மயில்சாமியையும் குடிக்க வைத்து இருக்கிறார்கள். கல்யாணம் செய்து செட்டிலாகவேண்டும் என்கிற ஆசையில் பணத்துடன் வந்த சாம்ஸ் ,நல்லபடியாக கிளினிக் நடத்திய டாக்டர் இவ்விருவரையும் குடிகார கோமாளிகளாக மாற்றிய குற்றமும் இயக்குனரை சேரும்.
படம் முடிந்து வெளியேறியபோது நமக்குள் குற்ற உணர்வு.!
–தேவிமணி.












