கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், பிரேக் ஃபாஸ்ட். இதில் ராணவ், ரோஸ்மின், அமிதா ரங்கநாத், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அர்ச்சனா, ரவி மரியா, c. ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இசை: ஜி வி பிரகாஷ் குமார். ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர்செல்வம்.
நாயகன் ராணவ் கிராமத்து சூழலில், ஃபேமிலி சென்டிமென்ட்டுடன் வளர்ந்தவர். நாயகி ரோஸ்மின், எல்லாவற்றையுமே பிசினஸாக பார்க்கக்கூடிய, மல்டி மில்லியன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் சந்தித்த சில நாட்களிலேயே, ஒருவரை ஒருவர் விரும்புவதுடன் கல்யாணமும் செய்து கொள்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் அளப்பரிய அன்பினை செலுத்தி வரும் இவர்களது வாழ்க்கை, மிகவும் மகிழ்ச்சியுடன் செல்கிறது. சில மாதங்கள் சென்ற நிலையில், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படுவதோடு, காதல், கல்யாணம் என சென்ற அதே வேகத்தில் விவாகரத்தும் ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் கதை.
அறிமுக நாயகனான ராணவ், கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை குறை சொல்லமுடியாத அளவில் வெளிப்படுத்தியிருக்கிறார். குடும்ப சூழ்நிலை கருதி கிடைக்கும் அனைத்து சிறிய வேலைகளை செய்யும் போதும், மிதமிஞ்சிய பணத்தின் காரணமாக அடாவடியாக நடந்து கொள்ளும் மனைவியின் அட்டகாசத்தை பொறுத்துப் போகும் போதும், கோபப்படும் போதும் காட்சிகளுக்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அறிமுக நாயகியான ரோஸ்மினுக்கு அழுத்தமான கதாபாத்திரம். பணக்காரத்திமிர், அப்பாவிடம் சண்டை, தவறாக நெருங்குபவரிடம் காட்டும் சீற்றம், காதலில் உருகுவது, பாடல் காட்சியில் கிளாமர் என, நடிப்பதற்கு ஏராளமான காட்சிகள். அதை சரியாக பயன் படுத்திக்கொண்டுள்ளார். அனைத்துக் காட்சிகளிலுமே சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதையை நகர்த்திச்செல்லும் காதல் ஜோடிகளாக, கிருத்திக் மோகன் – அமிதா ரங்கநாத். பெரிதாக ஈர்க்கவில்லை. சம்பத் ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா, ரவிமரியா, c. ரங்கநாதன் ஆகியோரது பங்கு திரைக்கதையை நகர்த்திச்செல்ல உதவியிருக்கிறது.
எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு, ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை, ஏமாற்றம் அளிக்கிறது. ‘இதயம் துடிக்கிறதே’ என்ற, அந்த ஒரு பாடல் மட்டும் மீண்டும் கேட்கும்படி இருக்கிறது.
சகிப்புத்தன்மையற்ற, போதிய புரிதலின்றி வாழும் தம்பதியினர் இடையே ஏற்படும் பிரிவுக்கான காரணத்தையும், சேர்ந்து வாழும் சூட்சமத்தையும் சொல்லியிருக்கிறார், இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா. ஆனால், அது ரசிக்கும்படி இல்லை!












