அக்சய்குமார் 
‘சிறை’ திரைப்படத்தின் கதை, 1997 – 2003 ஆண்டுகளுக்கிடையே நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. விக்ரம் பிரபு, வேலூர் ஆயுதப்படைக் காவலர் (Armed Reserve Police). இவர் மனிதாபிமானமுள்ள, நேர்மையான மனிதர். வேலூர் மத்திய சிறையில் இருக்கும், கொலைக்குற்றவாளி கைதியான எல்.கே.அக்ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு, விக்ரம் பிரபுவிடம் கொடுக்கப்படுகிறது.
விக்ரம் பிரபு, சக காவலர்களுடன் சிவகங்கை நீதிமன்றத்திற்கு அரசு பேருந்தில் பயணமாகிறார். போகும் வழியில், கைதி எல்.கே.அக்ஷய் குமார் காவலரின் துப்பாக்கியுடன் தப்பிவிடுகிறார். இதனால், விக்ரம் பிரபுவும் சக காவலர்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். தப்பிச்சென்ற கைதியை, விக்ரம்பிரபு கண்டு பிடித்தாரா? என்பதை, விறுவிறுப்பாகவும், எமோஷனலாகவும் சொல்வதே ‘சிறை’ படத்தின், திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
சிறை விக்ரம் பிரபுவின் 25வது திரைப்படம். கடந்த, 13 வருடங்களில், தாத்தா (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்), அப்பா (இளைய திலகம் பிரபு), இவர்களின் வழியில் பலவகையான கதைகளில், விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து, தமிழ்த்திரையுலகில் தன்னை நிலைநிறுத்தி வருகிறார். அவருக்கு, cinemamurasam.com குழுவினரின் பாராட்டுக்கள்.
விக்ரம் பிரபு, ஆயுதப்படைக் காவலர், கதிரவன் கதாபாத்திரத்தில் மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார். அடியாட்களை அடித்து பறக்கவிட ஆசைப்படும் ஹீரோக்கள் மத்தியில், கதை இருக்கும் படத்தில், தன்னை அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தை இலகுவாக கையாண்டிருப்பது. அவரது முதிர்ந்த, திறமையான நடிப்பினை வெளிப்படுத்துகிறது. கோர்ட்டில், டவாலியை கையாளும் காட்சி, கைதி தப்பிக்கும்போது சுடும் காட்சி, விசாரணை கமிஷனில் பதிலளிக்கும் காட்சிகள் என அனைத்து காட்சிகளிலும், நிஜக்காவலராகவே பரிமளிக்கிறார். விக்ரம் பிரபுவின் மனைவியாக நடித்திருக்கிறார், அனந்த தம்பிராஜா. நடிப்பதற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. நடித்த சில காட்சிகளில், குறை சொல்ல முடியாத நடிப்பு.
‘Seven Screen Studio’ நிறுவனத்தின் தயாரிப்பாளர், லலித்குமாரின் மகன் எல்.கே.அக்ஷய் குமார், இப்படத்தின் மூலமாக தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமாகிறார். அறிமுக நடிகரைப்போல் அல்லாமல், இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். படத்தின் பிற்பகுதியில் வரும் அனைத்து காட்சிகளிலுமே, தனது திறமையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இவரின் காதலியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், பாடல்கள் பெரிதாக கவரவில்லை! பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், பின்னணி இசை சிறப்பு. காட்சிகளின் உணர்வை அழுத்தமாக பிரதிபலிக்க உதவியிருக்கிறது.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு பாராட்டும்படி இருக்கிறது. இவரது ஒளிப்பதிவை மேலும் சிறப்பாக்கி இருக்கிறது, பிலோமின் ராஜ்ஜின் படத்தொகுப்பு. குறிப்பாக, பஸ்ஸில் நடக்கும் சண்டைக்காட்சியை சொல்லலாம். இப்படி பல காட்சிகளில், இருவரும் சிறப்பான பங்களிப்பினை செய்திருக்கிறார்கள்.
‘டாணாக்காரன்’ தமிழ் எழுதிய கதைக்கு, முடிந்தவரை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.
சில இடங்களில் லாஜிக் மீறல்கள். சில இடங்களில் தெளிவு படுத்தப்படாத காட்சிகள். மற்றும் ஒரு சார்பான காட்சிகள். படத்தின் பலவீனங்களாக இருக்கின்றன. உதாரணமாக, போலீஸ் ஸ்டேஷனில், மூனார் ரமேஷ் பேசும் காட்சியைச் சொல்லலாம். (துப்பாக்கியை லோடு பண்ணியிருப்பது குறித்து.) அதாவது, பொதுவாக கோர்ட்டுக்கோ, வேறு ஜெயிலுக்கோ கைதியைக் கூட்டிவரும் ஆயுதப்படைக்காவலர்கள், துப்பாக்கியை லோடு செய்து கொண்டுவரமாட்டார்கள். (காட்ரிட்ஜ் (Cartridge) தனியாக இருக்கும்.). இந்தப்படத்தில் கைதி இஸ்லாமியர் என்பதால் லோடு செய்து கொண்டுவந்தேன். என, விக்ரம் பிரபுவுடன் வரும் காவலர் கூறுவார். அதற்கு, மூனார் ரமேஷ் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார். இது, வலிய திணிக்கப்பட்ட காட்சி போல் இருக்கிறது. (ஏனென்றால், மதுரை ஜெயிலில் இருக்கும் அந்தக்கைதி, கதை நடக்கும் காலத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு, வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார்.) நாட்டில் நடக்கும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு லோடு செய்திருக்கலாம் அல்லவா? .
இன்னொரு காட்சியில், கைவிலங்கு, நீண்ட சங்கிலியுடன் கைதி. துப்பாக்கியுடன் மூன்று காவலர்கள் பஸ்ஸில் பயணிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் நின்று திரும்ப செல்லும் நிலையில், இவர்கள் வராத நிலையில் பஸ் செல்கிறது. அது ஏற்றுக் கொள்ள முடியாதது.
சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடும், ஆயிரக்கணக்கான அப்பாவிகளுக்கு குரல் கொடுத்திருந்தால், ‘சிறை’ இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மற்றபடி, ‘சிறை’, ஒரு முக்கியமான பிரச்சனையை பேசியிருப்பதால், அதை கௌரவித்து பாராட்டலாம்.












