‘அருண் விஷூவல்ஸ்’ மற்றும் ‘மெட்ராஸ் சினி புரொடக்ஷன்’ தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், சாருகேசி. இதில் ஒய்.ஜி.மகேந்திரன், சுகாசினி மணிரத்னம் , ராஜ் ஐயப்பா, ரம்யா பாண்டியன் , சத்யராஜ், சமுத்திரகனி, தலைவாசல் விஜய், மதுவந்தி, சாய்தீனா, ரித்விக், ஜெயபிரகாஷ் , பிரித்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசை : தேனிசைத் தென்றல் தேவா. ஒளிப்பதிவாளர்: சஞ்சய் பி எல்.
கர்நாடக சங்கீத உலகின் சாம்ராட்டாக போற்றப்படுபவர், (ஒய்.ஜி.மகேந்திரன்) ஆச்சாரம் அனுஷ்டானம் மிக்க சாருகேசி. அவரது மனைவி (சுகாசினி) பாக்யம், மகன் (ராஜ் ஐயப்பா) சஞ்சய் . இதுவே சாருகேசியின் குடும்பம்.
சாருகேசியின் வானளாவிய புகழே, தனது வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக உணருகிறார் அவரது மகன் சஞ்சய். இதனால் அப்பாவின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இதனால் சாருகேசி அவமானப்படும் வகையில் பல விஷயங்களை செய்து வருகிறார். இதனால் பெரிதும் மன வருத்தத்திற்கு சாருகேசி ஆளாகிறார். எல்லாவற்றுக்கும் உட்சபட்சமாக சஞ்சய், (ரம்யா பாண்டியன்) கௌதமியை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வருகிறார். அந்த நிமிஷம் முதல் கௌதமியும் சாருகேசியை அவமானப்படுத்த ஆரம்பிக்கிறார். ஏன், எதற்கு? அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘சாருகேசி’படத்தின் மீதிக்கதை.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா, சாருகேசியைப் பற்றிய ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர், அவரைப்பற்றி கூறுவது போல் திரையில் காட்சிகள் தொடங்கி முடிகிறது. ஆவணப்பட இயக்குநராக சமுத்திரக்கனியும் அவரை பேட்டி எடுப்பவராக மதுவந்தியும் நடித்துள்ளனர். கடவுளாக சத்யராஜ் நடித்துள்ளார்.
ஒய் .ஜி. மகேந்திரன் சாருகேசி கதாபாத்திரத்திற்கு வெகு பொருத்தமாக அமைந்திருக்கிறார். விஷயங்களை முழுமையாக கற்ற, வித்வானைப் போல் கம்பீரமாக காட்சித் தருகிறார். அவரது மனைவி பாக்கியமாக சுகாசினி கணவருக்கேற்ற மனைவியாக, மகனின் செயலை நினைத்து துயருறும் தாயாக கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார். சாருகேசியின் டிரைவராக நடித்திருக்கும் தலைவாசல் விஜய். ஒய்ஜி மகேந்திரனின் மகனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா, மருமகளாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் போன்றோரும் சிறப்பான முறையில் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
சஞ்சய் பி எல் செய்துள்ள ஒளிப்பதிவு, நேர்த்தியாக இருக்கிறது. இசை, தேவா. க்ளைமாக்ஸ் பாடலில், அவர் முன்பு இசையமைத்த ஹிட் பாடல் சாயல்களும் வந்து போகிறது. இருந்தாலும் ரசிக்கவும், ஆச்சர்யப் படுத்தியும் இருக்கிறார். நல்ல பாடல் வரிகளோடு, ரசிக்கத்தக்க வசனங்களையும் எழுதியிருக்கிறார், பா.விஜய்.
ஒரு சில நாடகத்தனமான காட்சிகளையும், சில கதாபாத்திரங்களின் அதீதமான நடிப்பினையும் தவிர்த்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த சாருகேசி.
சாருகேசி – மகன் விஷயத்தில் மகான்!












