பாலன், இது ஒரு சர்வைவல் த்ரில்லர்! ஒரு கொலைக் குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவிக்கும் கர்ப்பிணி ஃபர்சானா பலத்திங்கல். சிறையிலேயே குழந்தையும் பெற்றெடுக்கிறாள். வருடங்கள் பல சென்ற நிலையில், தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலை ஆகிறாள். சிறையின் கண்காணிப்பாளர், அரசு சாரா அமைப்பு ஒன்றை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். அந்த சமயத்தில், அங்கிருக்கும் பெண் ரௌடி சிறையிலிருந்து வெளியே சென்றபின் தனது கட்டுப்பாட்டிற்க்குள் வரவேண்டும். என நிர்பந்திக்கிறாள். ஃஃபர்சானா, இந்த இருவரையும் உதாசீனப்படுத்துவதுடன் தனது அடையாளங்களை மறைத்துவிட்டு ஒரு புதிய வாழ்க்கையைத்தேடி, வெவ்வேறு அடையாளங்களுடன் பல பெயர்களில் தனது மகனுடன் இலக்கில்லாமல் பயணிக்கிறாள். எந்த இடத்திலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் தனது மகனை பிரியும் சூழல் உருவாகிறது. அடையாளங்களை மறைத்து வாழ்ந்த இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா? எனும் சர்வைவல் க்ரைம் த்ரில்லர் தான், பாலன்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஃபர்சானா பலத்திங்கலுக்கு இது தான் முதல் திரைப்படம். ஆனால், அது தெரியாதபடி சிரத்தையின்றி நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் தனது இருப்பினை பதிவு செய்வதோடு ரசிகர்களின் மனதிலும் எளிதாக இடம் பிடித்து விடுகிறார். ஒரு வித இருக்கமான மனநிலையில், எதேச்சையாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொண்டு, ஒரு பக்கா கிரிமினலாக எந்தவிதமான குற்ற உணர்ச்சியுமின்றி அவர் நடந்து கொள்ளும் விதம் மிரட்டல். கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார்.
பாலனாக நடித்திருக்கும் சிறுவன் ஆதிசேஷன் கே.ஆர், ஃபர்சானாவுக்கு கொஞ்சம் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். அம்மா சொல்லிக்கொடுப்பதை அப்படியே பிடித்துக்கொண்டு செயல்படும் விதத்தில் அவரை மிஞ்சுகிறார். ஸ்கூல் பேக்கில் தனது யூனிஃபார்ம் ட்ரஸ்ஸை மறைப்பதன் மூலமாக தனது அடையாளத்தை அழிக்க முற்படும் காட்சியில் அம்மாவை மிஞ்ச முயற்சிக்கிறார். சிறப்பான நடிப்பு.
வளர்ந்தவிட்ட பாலனாக நடித்திருக்கும் ஜினன், ஓகேவான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் டோவினோ தாமஸ். அது படத்திற்கு பலமாக இருக்கிறது. மற்றபடி காவலராக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால், சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கிரிஷ் ஏ.டி, படுத்தபடி நடித்திருக்கும் பாட்டி உள்ளிட்டவர்களும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு படத்தின் பெரும் பலமாக இருக்கிறது. காட்சிகளின் சூழலை ரசிகர்கள் உணரும் வண்ணம் படம்பிடித்து அசத்தியிருக்கிறார். சுஷின் ஷாம் பின்னணி இசையும் காட்சிகளை மேம்படுத்துகிறது. ஒளிப்பதிவும், இசையும் பல காட்சிகளில் ரசிகர்களுக்கு திகில் உணர்வையும் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்ற பதட்டத்தினையும் ஏற்படுத்துகிறது.
ஃபர்சானாவின் கதாபாத்திரத்தை வடிவமைத்த கதையாசிரியர் ஜித்து மாதவன், அந்த கதாபாத்திரத்தின் பின்னணியையும், அதன் தன்மையையும் இன்னும் தெளிவாக வடிவமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், ‘பாலன்’ ஒரு பக்கா க்ரைம் ட்ராமா!












