கள்ளக்குறிச்சி, ‘வளையாம்பட்டு’ கிராமத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நடந்த மறுமணத்தின் உண்மை சம்பவமே ‘நூறுசாமி’ திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதில் ஒருசில கதாபாத்திரங்களின் உண்மையான பெயரும் அப்படியே இடம் பெறுகிறது. ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி சிறப்புத்தோற்றதில் நடித்திருக்கிறார்.
இரண்டு மகன்களுக்கு தாயான ஸ்வாசிகா துரதிர்ஷ்டமாக இளம் வயதில் விதவையாகிறார். அதன்பிறகான வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் சொந்த பந்தங்கள் கைவிட்ட நிலையில், கிடைக்கும் சிறு சிறு வேலைகளின் மூலம் இரண்டு மகன்களையும் படிக்க வைக்கிறார். மகன்கள் வெளியூரில் தங்கிப்படிப்பதால் பெரும்பாலான நாட்களையும், நேரங்களையும் தன்னந்தனியாளாக தள்ளி வருகிறார். இதற்கிடையே ஆண் துணை இல்லாத காரணத்தால் ஊரில்லுள்ள சிலரின் பாலியல் சீண்டல்களுக்கும் ஆளாகிறார். இந்நிலையில் மறுமணம் செய்துகொள்ள விருப்பப்படும் ஸ்வாசிகா கல்லூரி செல்லும் தனது மூத்த மகன் அஜய் திஷானிடம் அது குறித்து பேசுகிறார். அதற்கு அவர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.
அஜய் திஷான், சில வருடங்களில் வேலைக்குச் செல்ல குடும்பம் கொஞ்சம் வறுமையிலிருந்து மீளுகிறது. பெரும்பாலான வருடங்களையும், நாட்களையும் தனிமையில் கழித்துவரும் தனது அம்மாவின் நிலை குறித்து தெரியவருகிறது. மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அதற்கு ஸ்வாசிகா மறுப்புத் தெரிவிக்கிறார். ஆனால், அஜய் திஷான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். அம்மாவின் மறுமணம் நடந்ததா? என்பதே நூறுசாமி படத்தின் கதை.
இன்றைய வாழ்க்கை முறை டேட்டிங், லிவிங் டுகெதர் என ஆகிவிட்ட சூழலில், இன்னும் பல ஊர்களில் மறுமணத்தின் மீதான சமூக மற்றும் உளவியல் சார்ந்த பார்வைகள் மாறவில்லை! என்பதே உண்மை. மறுமணம் கூடாது. அது தவறு என காலாகாலமாக கட்டமைக்கப்பட்ட சம்பிரதாயங்களை உடைத்து, மறுமணம் ஒன்றும் தவறில்லை என்பதை உணர்ந்து, மகன்களே தனது தாய்க்கு துணை தேடித் தந்தது வரவேற்கத்தக்க பாராட்டுக்குரிய விஷயம். இதை ஆமோதிக்கும் வண்ணம் இப்படத்தை தயாரித்த நடிகர் விஜய் ஆண்டனிக்கும், கண்ணியத்துடன் இயக்கிய இயக்குநர் சசிக்கும் பாராட்டுக்கள்

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஸ்வாசிகாவைச் சுற்றியே காட்சிகள் நகர்கிறது. முழுப்படத்தினையும் தாங்கிச்செல்கிறார். மகன்களை எப்படியாவது படிக்க வைத்து வேலை வாங்கித் தந்து விடவேண்டும். என சதா உழைத்துக்கொண்டிருக்கும் பெண்மணியாகவும், பாலியல் அத்துமீறல்களுக்கு சீறிய படி எதிர்ப்பு தெரிவிக்கும் போதும், தனிமையில் நேரத்தை கழிக்க முடியாமல் தவிக்கும் போதும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் கடைசி 45 நிமிடங்களில், ஏறக்குறைய 15 நிமிடங்கள் மட்டுமே நடித்திருக்கும் விஜய் ஆண்டனியின் காட்சிகளும், நடிப்பும் படத்திற்கு பெரும் பலத்தை கொடுத்திருக்கின்றன. அவர் பேசும் வசனங்களும் பாராட்டும்படியாக இருக்கிறது.
ஸ்வாசிகாவின் மூத்த மகனாக அஜய் திஷான், இளைய மகனாக சக்தி அவர்களது ஜோடியாக காவ்யா அனில், பாடினி குமார் மற்றும் கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என அனைவருமே குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளனர். இதில் பக்ஸ், வினோதினி தம்பதியினரின் காட்சிகள் ரசிக்கும்படி இல்லை.
ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷின் ஒளிப்பதிவும், பாலாஜி ஸ்ரீராம் பின்னணி இசையும் ரசிகர்களை ஈர்க்கிறது. உணர்வுப்பூர்வமான உண்மை சம்பவத்தை உயிரோட்டமாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் சசி.
‘நூறுசாமி’ – சமூக அழுத்தத்திற்கான விடுதலை!












