ராமநாதபுரம் மாவட்டத்தின் பாரம்பரிய நாட்டுப் பாய்மரப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு, நடிகர் சூரி முழுக்க முழுக்க ஆக்ஷன் கதாநாயகனாக அவதரித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நாட்டுப் பாய்மரப் போட்டிக்கு புகழ்பெற்ற இடமாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசிப்பட்டினம், தொண்டி (மகா சக்திபுரம்), திருப்பாலைக்குடி மற்றும் தேவிபட்டினம் ஆகிய கடலோரக் கிராமங்களில் இன்றும் விமரிசையாகப் பாய்மரப் படகுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூடத் தொண்டியில் இந்த அதிரடியான போட்டி கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த ‘மண்டாடி’ திரைப்படத்தின் பெரும்பாலான முக்கியக் காட்சிகள் பாசிப்பட்டினத்தின் கடலோரப் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளன.
ஒரே கடலோரக் கிராமத்தில் வசிக்கும் சூரி மற்றும் சுஹாஸ் ஆகிய இரு நெருங்கிய நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. இதில் வில்லத்தனமான குற்றப்பின்னணியைக் கொண்ட சுஹாஸ், தனது சுயநலத்திற்காகச் சூரியை நயவஞ்சகமாக ஏமாற்றிப் படகு தயாரிக்கும் தொழிலில் சட்டவிரோதமாகப் பெரும் பணத்தைச் சம்பாதித்து வருகிறார்.
சுஹாஸின் இந்தத் தொழிலுக்கு, அந்தப் பகுதியில் நடக்கும் பாய்மரப் படகுப் போட்டிகளில் தொடர்ந்து அசுர வேட்டையாடி வெற்றி பெற்று வரும் சூரியின் அசாத்திய திறமைதான் மிகப்பெரிய தூணாக விளங்குகிறது. இப்படிப்பட்டச் சூழலில், எதிர்பாராத சில திருப்பங்களால் இரு நெருங்கிய நண்பர்களுக்குள்ளும் ஒரு மாபெரும் ஈகோ மோதலும், தீர்க்க முடியாத அசுரப் பகையும் வெடிக்கிறது. தன்னை எதிர்த்து நிற்கும் சூரியை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சுஹாஸ் துரோகப் புத்தியுடன் சதித் திட்டம் தீட்டுகிறார்.
சூரி, சுஹாஸ் இருவரும் தனித்தனி அணியாக மோதுகிறார்கள். அந்தப் பாய்மரப் படகுப் போட்டியின் இறுதி முடிவு என்ன ஆனது. தனது நண்பனின் வஞ்சக வலைகளிலிருந்து சூரி எவ்வாறு தப்பினார், என்பதை விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளோடு இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விறுவிறுப்பான திரைக்கதை மூலமாக விவரித்துள்ளார்.
இப்படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்ட ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே தங்களது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, இப்படத்தில் சூரி, மகிமா நம்பியார் மற்றும் ரவீந்திர விஜய் ஆகிய மூவருக்கும் இடையே பயணிக்கும் காதல் காட்சிகள் எந்தவொரு எல்லை மீறலும், வக்கிரமும் இன்றி மிகவும் கண்ணியமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்த உணர்வுபூர்வமான காதல் காட்சிகளில், ஆக்ஷன் நாயகனாக மிரட்டியுள்ள சூரியையும், மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள ரவீந்திர விஜய்யையும் தனது அசாத்தியமான மற்றும் எதார்த்தமான நடிப்புத் திறமையால் நடிகை மகிமா நம்பியார் முற்றிலும் ஓரம் கட்டிவிடுகிறார். ஒரு கிராமத்துப் பெண்ணின் வலியைத் தனது கண்கள் மூலமாகவே கடத்தி, இப்படத்தின் மிக முக்கியத் தூணாக மகிமா நம்பியார் மிளிர்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கும் சூரி, உணர்வுபூர்வமான நடிப்பிலும் கவனிக்கத்தக்க வகையில் முத்திரை பதித்துள்ளார். இப்படத்தில் ரவீந்திர விஜய், தனது கதாபாத்திரத்தின் எல்லையை உணர்ந்து மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுக்கமான மற்றும் எமோஷனல் காட்சிகளுக்கு இடையே, நடிகர் பாலசரவணன் தனது வழக்கமான டைமிங் காமெடி மற்றும் நையாண்டி பஞ்ச் வசனங்கள் மூலம் தியேட்டரில் ரசிகர்களைச் சோர்வடையாமல் கலகலப்பாக வைத்திருக்க உதவிகரமாக இருக்கிறார்.
மூத்த நடிகர் சத்யராஜ் சில குறிப்பிட்ட காட்சிகளில் மட்டுமே வந்தாலும், கதையின் திருப்புமுனைக்கு வலுசேர்க்கும் வகையில் தனது முத்திரையான அனுபவ நடிப்பைத் தந்துள்ளார். இவருக்கு இணையாகப் படத்தின் பிரதான வில்லனாக அசுரத்தனம் காட்டியுள்ள சுஹாஸ், தமிழ் சினிமா ரசிகர்களைத் தன் பக்கம் உற்று கவனிக்க வைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் பாடல்களுக்கும், கடலின் பிரம்மாண்ட பின்னணி இசைக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ராமநாதபுரம், பாசிப்பட்டினத்தின் கடலோர அழகை ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் தனது கேமரா மூலம் மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருந்தாலும் அது போதவில்லை! என்ற எண்ணமே வருகிறது. பாசிப்பட்டினத்தின் கடலோர அழகை நேரில் கண்டவர்கள் அப்படித்தான் உணர்வார்கள்!
கடலில் நடக்கும் ஆபத்தான ஆக்ஷன் மற்றும் பாய்மரப் படகுப் போட்டி காட்சிகளுக்காகப் பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ ஆகிய தமிழ்மின்னின் மூன்று முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் இணைந்து மிரட்டலான ஸ்டண்ட்களை வடிவமைத்துள்ளனர்.
படத்தின் க்ளைமாக்ஸ் பாய்மரப் பந்தயக் காட்சியை இன்னும் சற்றே பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் உருவாக்கியிருக்கலாம் என்ற சிறிய குறை இருந்தாலும், மற்றபடி குடும்பத்துடன் தியேட்டரில் ரசித்துப் பார்க்கக்கூடிய அளவில் இந்த ‘மண்டாடி’ பாக்ஸ் ஆபீஸில் ஒரு பக்கா கமர்சியல் வெற்றியாக ‘ஓகே ஆனவன்’ தான் என்று தாராளமாகச் சொல்லலாம்.












