
தயாரிப்பு: பொடன்ஷியல் ஸ்டுடியோஸ், கதை ,இயக்குநர் :நெல்சன் வெங்கடேசன், ஒளிப்பதிவு:கோகுல்பினாய் ,இசை:ஜஸ்டின் பிரபாகரன்,வசனம்:சங்கர் தாஸ்.
எஸ்.ஜே.சூர்யா.,பிரியா பவானி சங்கர்,கருணாகரன், அனில்குமார்.
__________________________________________________
எஸ்.ஜே.சூர்யா படம் தானே,அது இப்படித்தான்யா இருக்கும் என்று மனசுக்குள் ஒரு கதையை வரைந்து கொண்டு வந்து உட்காருகிறவர்களுக்கு பலத்த ஏமாற்றம்தான்.!
“கொன்னுட்டான்யா…எப்படிய்யா அந்த ஆளு மாறுனான்! ‘வாடிய பயிரை பார்க்கிற போதெல்லாம் வாடுனேன்னு பாடுன அந்த வள்ளலாருக்கு இந்த அஞ்சனம் அழகிய பிள்ளை மாதிரி ஒரு பக்தன் கிடைக்கவே மாட்டான்யா. எக்குத்தப்பாக பேசி ஏடாகூடமாக முகத்தை காட்டுன அந்த எஸ்.ஜே.சூர்யாவை சுத்தமா தொடச்சி எடுத்து எறிஞ்சிருக்கார் நெல்சன் வெங்கடேசன்.” என்று படம் பார்த்திட்டுவர்றவங்க எல்லோருமே ஒரு மனசா சொல்றாங்க. இதுக்கு எதிரா யாராவது சொன்னாங்கன்னா ‘சித்திரை வெயிலு,அக்கினி நட்சத்திரம் அதான் பொலம்புறார்’னு விட்ருங்க.!
ரொம்பவும் லேசான கதை. மேகம் மாதிரி! எலக்ட்ரிசிட்டி போர்டு எஞ்சினியர் வேலை சூர்யாவுக்கு.! கவர்மெண்டு வேலைன்னாலும் கல்யாணம் நடக்கல.சொந்தமா பிளாட்டு வாங்கி கல்யாணம் பண்ணிட்டு குடித்தனம் நடத்தலாம்னு பிள்ளைவாள் பிளான் போட்ட பிறகுதான் ஒரு எலி ஏழரையை கூட்டிட்டு வருது.அதுக்கும் குடும்பம், புள்ள குட்டி பாசம்னு இருக்கும்ல.அந்த பாசம் எப்படி பிள்ளைவாளை பாடாப்படுத்தி பஞ்சர் ஆக்குது, இதுதான் கதை.! ங்கொய்யால இங்க்லீஸ் படம் மாதிரி இருக்குய்யா!
கூட்டு ,பொரியல், பச்சடி, ஊறுகான்னு லஞ்சுக்கு வச்சுக்கிட்டாலும் பிரியாணிக்கு தயிர் வெங்காயம் மட்டும் போதும்ல. அதுமாதிரிதான் இந்த கதைக்கு ஹீரோயின் பிரியா பவானி சங்கர். ஒரே காமடியன் கருணாகரன், ஒத்த வில்லன் அனில் குமார்.வில்லன்னா ஆஸ் யூசுவலா பார்க்கிற டெர்ர்ரர் கிடையாது. அந்தாளும் கவுத்திப் போட்ட கரப்பான்பூச்சி மாதிரிதான்!
கட்டிக்கப் போறவளுக்கு சிவப்புக் கலர் பிடிக்கும்னு காஸ்ட்லியான சோபா வாங்கிப் போட்டா அதுக்கு வந்த துயரங்களைப் பார்த்துக் கலங்குற சூர்யாவை பார்த்துக்கிட்டே இருக்கலாம். அந்த மூஞ்சில அவ்வளவு சோகம். அதுல நமக்கு ஒரு சுகம்னா அவ்வளவு காமடின்னு அர்த்தம். ஆனா எதுத்த வீட்டு பூனைக்குட்டி இவர் வீட்டுல வந்து சாகனுமா என்னா..நெஜமாவே கலங்குறோம். இங்கிலிஸ் படம் பார்க்கிற உணர்வுக்கு ஒத்தாசையா இருக்குறது இசை. ஜஸ்டின் பிரபாகரன் சிம்பனியை கரெக்டான எடத்தில வெச்சிருக்கார்.
அப்பப்ப வந்தாலும் கருணாகரனின் காமடி கச்சிதம்.
பாடல்கள் அவ்வளவாக நினைவில் நிக்கல. இந்த கதைக்கு தேவையும் இல்ல. பின்னணி இசையும் கோகுல் பினாயினின் பின்னணி இசையும் ரத்த ஓட்டமும் சுவாசமுமா இருக்கே! இது போதும் சார்.
கோடை வெயிலில் குடும்பத்துடன் மான்ஸ்டர் படம் பார்க்கலாம்.
–-தேவிமணி.












