எழுத்து இயக்கம் : விஜய் ஆனந்த் , இசை : விஜய நாராயணன் , ஒளிப்பதிவு :தீபக் குமார் , தயாரிப்பு ; எஸ்.பி.சவுத்ரி ,இணை தயாரிப்பு : ரமேஷ் .
சந்தானம் ,யோகிபாபு ,ரித்திகா சென் , ராதா ரவி , பிரம்மானந்தம் ,தருண் அரோரா ,ஹேமந்த் பாண்டே ,
****************
கற்பனையில் வரைந்த காரிகையை தேடிப்பிடித்து அவளை அனுபவிப்பதற்கு கோடிகளை கொட்டவும் தயாராக இருக்கிற மும்பை வில்லன் தருண் அரோரா.. இதற்கு ஆள் பிடிக்க ஏஜெண்டுகள்,சப்-ஏஜெண்டுகள்.அப்படி ஒரு ஏஜெண்டு ராதாரவி. இவருக்கு சப் ஏஜெண்டு சந்தானம். ஹீரோ இவர் என்பதால் கைத்தடியாக யோகிபாபு. ஓவியமாக தெரிந்த கன்னிப்பெண் ரித்திகா சென் திருச்செந்தூரில் சினிமா டைரக்டராக வேண்டும் என்கிற கனவில் திரிகிறார். அவரை எப்படி சந்தானம் மடக்கி மும்பைக்கு கொண்டு போகிறார் என்பதுதான் கதை.நல்ல பிளாட்.!
இயக்குநர் விஜய் ஆனந்த் கூடுமானவரை கட்டி இழுத்திருக்கிறார். புதுமை என்னவென்றால் ரித்திகாசென்னுக்கு இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை. பொதுவாக ஹீரோயினாக வேண்டும் என்கிற ஆசைதான் நாயகிகளுக்கு வரும் .இந்த பெண்ணுக்கு அநியாய ஆசை. அவர் கதை சொல்கிற பாங்கும் அதற்கு சந்தானத்தின் ‘ரிவிட் ‘டும் கலகல. ‘டகால்டி ‘என்கிற சொல்லுக்கு என்னென்ன பொருந்துமோ அவையெல்லாம் இருக்கின்றன. ஆனாலும் முற்பாதி ‘ஒரு மாதிரி ‘யாகத்தான் இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு ‘டகால்டி’முழுமை பெறுகிறது.
சந்தானம்-யோகிபாபு இருவரும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம். இருவருமே தனித்தனியாக ராஜபார்ட் போடுகிறவர்கள் என்பதால் யாருக்குமே சேதாரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.இதிலும் ஒரு சுவை இருக்கவே செய்கிறது. வணிகரீதியான படத்துக்கு தகுந்த ஆளாக தன்னை செதுக்கிக்கொண்டிருக்கிறார் சந்தானம்.
கேசரி செய்வதென்றால்தான் சேர்மான அயிட்டங்கள் அதிகம் இருக்கும். இட்டலி சுடுவதற்கு அரிசி மாவு போதாதா? ரித்திகா சென் கரெக்ட் ஜாய்ஸ்.
இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரமே பிரம்மானந்தம் வந்தாலும் பரமானந்தம். ! டப்பிங் வாய்ஸ் சூப்பர்.
டகால்டி யாரு? சாட்சாத் சந்தானமேதான் !
ஜனரஞ்சகமான படத்தைத் தந்திருக்கிறார்கள்.