எழுத்து இயக்கம் :ஹரி சந்தோஷ் ,ஒளிப்பதிவு :குரு பிரசாத் ,இசை :குதுப் இ குமார்
பிரபு ,மதுபாலா ,நாசர் ,ராகுல் விஜய் ,பிரியா ,மனோபாலா,
************
தனது மகன் படித்து ,தேர்ந்து நல்ல பதவியில் அமர வேண்டும் என்பதுதான் ஒரு தந்தையின் ஆசையாக இருக்கும். இதில் பிரபுவின் கூடுதல் ஆசை தனது மகன் ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதுதான்.
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆடிட்டர் நண்பர் பிரபுவின் அந்தஸ்தை சொல்லி இழிவுபடுத்திவிடுகிறார். பலபேர் முன்பாக தன்னை கேவலப்படுத்தி விட்டானே நண்பன் என்கிற கோபம் பிரபுவுக்கு.!
“என்னய்யா கேவலப்படுத்திட்டே ..இரு பாத்துக்கிறேன்.என் பிள்ளையை பெரிய ஆடிட்டராக்கி உனக்கு மேல நிறுத்திக்காட்டுறேன்”னு சவால் விடுகிறார்.பழி வாங்கவேண்டுமல்லவா !
அது நடந்துச்சா? ஏன் நடக்கல ,மகனுக்குப் பதிலா பிரபுவே காலேஜ்க்கு படிக்கப் போக வேண்டிய அவசியம் எதுக்காக வந்தது ….இதுதாங்க கதை.
காமெடியா சொன்னாலும் அதில் ஒரு கருத்து இருக்கணும்கிறது இயக்குநர் ஹரி சந்தோஷின் ஆசை. கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த படம். ஆர்வத்துடன் தமிழில் ரீ மேக் பண்ணியிருக்கிறார்கள். அம்மா கணக்கு பட ஞாபகமும் வருது. ஆனா இதில் பிரபு -மதுபாலா கூடுதல் சந்தோசம்.
படிப்பு மண்டையில் ஏறல. கஷ்டப்பட்டு படிக்க வைக்கிற அப்பா-அம்மாவை ஏமாத்துறோமே என்கிற குற்ற உணர்ச்சி இல்லாத மகன்.
“பிளஸ் டு வரை தமிழ் மீடியம் காலேஜ்ல இங்கிலீஸ் மீடியம்! படி படின்னா எப்படி படிக்கிறது.?” என்று பொங்குகிற மகன் ராகுல் விஜய் வெகு இயல்பு .
“ஓகோ, படிக்கிறது அவ்வளவு கஷ்டமா ..ஈஸிடா !” என்று மகனின் பந்துக்கு சிக்ஸர் தூக்குகிற பிரபு அதைவிட இயல்பு. அன்னை இல்லத்து வாரிசு !
“ஈசி ன்னா அப்ப நீயே படி !” என்று தன்னை படிப்பிலிருந்து கழட்டிக்கொள்கிறான் பிள்ளை. இதன் பிறகு அப்பன் மகனுக்கு இடையில் நடக்கிற ‘டக் ஆப் வார் ‘தான் இடைவேளைக்குப் பின்னர் நிகழ்கிற விறு விறு.! பிரபுவின் காலேஜ் ஸ்டடி சிறப்பு.
பாஞ்சாலங்குறிச்சிக்குப் பின்னர் பிரபு-மதுபாலா ஜோடி இந்த படத்தில் இணைந்திருக்கிறது. ஆஜானுபாகான பிரபு ,வத்தலான மதுபாலா இருவரையும் கணவன் மனைவியாக பார்ப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது.
எத்தனை நாளைக்குத்தான் பீச்சுக்கே போய் கொண்டிருப்பது என்று அலுப்படைகிறவர்கள் காலேஜ் குமாரையும் ஒரு பார்வை பார்க்கவேண்டியதுதானே!