மாதவன் ,மவுலி, எம்.எஸ்.பாஸ்கர் ,ஆர்.எஸ்.சிவாஜி ,குரு சோமசுந்தரம்,ஷிவதா ,ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,அபிராமி,
திரைக்கதை இயக்கம் ;திலீப்குமார், ஒளிப்பதிவு; தினேஷ் கிருஷ்ணன்,கார்த்திக் முத்துக்குமார் ,இசை: ஜிப்ரான்,
மூலக்கதை : மலையாள திரைப்படம் ‘சார்லி’
***************
மணிமாறனின் சுருக்கம்தான் மாறா.!
நீண்ட நாள் இடைவெளிக்குப்பின்னர் கனத்த பாடியுடன் அறிமுகம் ஆகியிருக்கிறார் முன்னாள் சாக்லேட் பாய் மாதவன்.கதையிலும் அவ்வப்போதுதான் வந்து போகிறார்.இவருக்கு இணையாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். மாதவனை பார்க்காமலேயே ,பழகாமலேயே அவரின் மீது ஈர்ப்பு வந்து விடுகிறது. அதற்கு காரணம் மாதவனின் கலை ரசனை ,ஓவியம் வரைதல்.
ஓரளவு தன்னுடைய சீரமைப்புத் தொழிலுடன் இணைந்து போவதால் இருக்கலாம்.
கதையில் மாதவனை விட பாருவாக ( பார்வதி.) வருகிற ஷ்ரத்தாவுக்குத்தான் அதிக முக்கியம். அதில் பிழையுமில்லை.
நவராத்திரியில் ஒவ்வொரு இரவும் சாவித்திரிக்கு புதிய அனுபவம் கிடைப்பதைப்போல மாறாவை தேடிச்செல்கிற பாருவுக்கும் ஒவ்வொரு தேடலிலும் ஓர் அனுபவம்
சரி ,கதையின் சுருக்கத்தை சொல்லிவிட்டு விமர்சனத்தைத் தொடரலாமே என்கிறீர்களா?
அதுவும் சரிதான்.
“பாருவுக்கு (ஷ்ரத்தா) வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அது பிடிக்காமல் தன்னுடைய வேலை நிமித்தமாக தோழியை பார்க்க செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறாள் .
அழகிய கேரளத்தின் அந்த கிராமத்தில் மீனாட்சி ஆர்ட் காலரி என்கிற வீடு தனிக்கவனம் பெறுகிறது.
அந்த வீட்டின் முகப்பு சுவரில் பார்க்கும் அந்த சங்கு ஓவியம் சிறுவயதில் ஒரு கன்னியாஸ்திரி தனக்கு சொன்ன கதையை நினைவு படுத்தவே ஆர்வம் மேலிட அந்த வீட்டிலேயே தங்கி விடுகிறாள் .
அங்கு அவள் மாறாவின் ‘களவாடிய பொழுதுகள்’ என்கிற ஓவிய புத்தகத்தை பார்க்கிறாள்.
அந்த ஒவ்வொரு பக்கத்தின் ஓவியமும் கதை சொல்கிறது. மாறாவின் நண்பனுடன் அந்த ஓவியம் சொல்கிற கேரக்டர்களை சந்திக்க ஒவ்வொரு இடமாக செல்ல கதையும் கிடைக்கிறது.மாறாவை தேடுகிற பயணமாகவும் மாறிவிடுகிறது.
மாறாவை சந்தித்தாளா ,அவளது பயணத்தில் என்ன மாறுதல் நிகழ்கிறது என்பதுதான் “கதையின் சுருக்கம்.
மலையாள ‘சார்லி’யை நகலெடுக்காமல் சிற்சில மாற்றங்களுடன் கதையை கடத்துகிறார் இயக்குநர் திலீப்குமார்.
இவருக்கு வலுவான பக்கத்துணையாக அமைந்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணா,கார்த்திக் முத்துக்குமார் , ஆர்ட் டைரக்டர் அஜயன் சலிசேரி ஆகிய மூவரும்தான்.!அற்புதமாக இருக்கிறது.
ஆனால் திரைக்கதையின் போக்கில் சலிப்புத்தட்டுவதால் முழுமையுடன் ரசிக்கமுடியாமல் போகிறது.
சில காட்சிகள் ஏன் வருகின்றன .அவை நேரத்தை கடத்துவதற்கான இழுவையாக தோன்றவில்லையா என முற்பாதியில் எரிச்சல் வருகிறது.
இரண்டரை மணி நேரம் கதை ஓடுகிறது.
எம்.எஸ்.பாஸ்கர் ,குரு சோமசுந்தரம் ,அபிராமி ,ஆர்.எஸ்.சிவாஜி ஆகிய கேரக்டர்கள் சிறப்புடன் நடித்திருந்தாலும் செட் பிராப்பர்ட்டி மாதிரியான உணர்வே ஏற்படுகிறது.அழகிய அந்த ஓவியங்களைப்போல.
வெள்ளையனாக மவுலி.
நாடகத்தில் ஊறித் திளைத்தவர் என்பதால் அந்த பாணி தலை காட்டுவதில் வியப்பில்லை.
ஆனால் இவரது கேரக்டர்தான் கிளைமாக்சில் உயர்ந்து நிற்கிறது. அவரது காதலி மீனாட்சிதான் பஸ்சில் ஷ்ரத்தாவுக்கு கதை சொன்ன கன்னியாஸ்திரி என்பது தெரிகிற போது உருக்கம்தான்!
இயக்குநர் அழகோவியமாக தரவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அது படத்தில் இருக்கிறது.
ஜிப்ரானின் ‘காத்திருந்தேன்’ பாடலில் இருக்கிற இனிமையும் ,கவர்ந்திழுத்தலும் கதையில் இல்லாமல் போய்விட்டதே!
மாறா—-?