
வில்லனாக நடித்து வந்தவரை அதே வில்லன் அந்தஸ்தில் கதாநாயகன் பீடத்தில் அமரவைத்திருக்கிறார்கள்.
எஸ்,இது ஒரு வில்லன் நல்லவனாக மாறுகிற கதை. பெரிய வில்லனாக ராம்கி ,அவரது ஏவல் வேட்டை நாயாக ஆர்.கே.சுரேஷ்.
அந்த கொடைக்கானல் மலைக்கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து கிங் ராம்கி. இவரிடம் பல வேட்டை நாய்கள் வேலை பார்த்தாலும் அதிக முரட்டுத்தனமும் பாய்ச்சலும் மிகுதியாக இருக்கிற ராஜபாளையம் வேட்டை நாயாக சுரேஷ்.
நாய்க்கு எலும்புத்துண்டு போடுவதை போல சுரேஷுக்கு டாஸ்மாக் சரக்கு.
சுபிக் ஷாவை பார்த்ததும் சுரேஷுக்கு காதல். ஆனால் அந்த பெண்ணுக்கு வரவில்லை. ஆனாலும் கட்டாயத்திருமணம் மாதிரி நடந்து விடுகிறது. முரட்டுப்பயலாக இருந்தாலும் அவனுக்குள் மென்மையான அன்பும் இழையோடுவதால் அவனைத் திருத்தலாம் என்கிற நம்பிக்கையுடன் சுபிக் ஷா வாழத்தொடங்க ,வயிற்றில் வாரிசு வளர்கிறது. 
சுரேஷ் மாறினாரா,எதனால் அந்த மாற்றம் ,இடைச்செருகலாக வந்து சேருகிற வாலிபரால் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.!
முரட்டுத்தனமான வில்லனாக பார்த்த நம் கண்களுக்கு சற்றும் ஏமாற்றம் தராத அதே வில்லன்,அதே குடிகாரன். குடிகாரன் நல்லவனாக மாறியதால் தோற்றம் மாற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஜெமினி கணேசன் ரேஞ்சுக்கு ஆர்.கே.சுரேஷை மாற்ற முடியாது. அவரிடம் இருந்த வில்லக் குணம் நீர்த்து போகிறது.அவ்வளவுதான்.!
ஆனால் ராம்கி அடிக்கடி மீசையின் நுனியை ஏற்றிவிட்டுக்கொள்வதால் வில்லனாக முடியவில்லை என்பது சோகம். கேரக்டருடன் ஓட்ட முடியவில்லை. வசனங்களால் மட்டுமே ஒருவரை வில்லனாக காட்ட முடியாது. அராஜக தோற்றமும் இல்லை.ஏமாற்றம்.!
பாசமுள்ள அம்மாவாக ரமா .பொறுப்பை சரியாக நிறைவேற்றியிருக்கிறார்.
நாயகி சுபிக் ஷா லிப் லாக் .நடிப்பதற்கு நல்ல வாய்ப்புள்ள கேரக்டர்.சரியான தேர்வு பாராட்டலாம்.
மலைக்கிராமத்தின் பசுமை ,சின்னஞ்சிறு வீடுகள் அச்சு அசலாக ஈஸ்வரனின் கேமராவில் பதிவாகியிருக்கிறது..அழகு.
இயக்குநர் ஜெய் சங்கர் சற்று மெனக்கெட்டிருக்கலாம் . கிளைமாக்சில் இருந்த சென்டிமெண்ட் பாராட்டுக்குரியது.
வேட்டைநாய் ,வீட்டுநாயாகி விட்டது.!












