தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதியன்று நடந்தது. இத் தேர்தலில் சங்க உறுப்பினர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன் கவுரவ செயலாளராகவும், எஸ்.சந்திரபிரகாஷ் பொருளாளராகவும், எஸ்.கதிரேசன் துணைத்தலைவராகவும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றனர்.
இந்நிலையில்,திரைப்பட தயாரிப்பாளர்கள் கே.ராஜன், பி.டி.செல்வகுமார், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர், தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் நேரடியாக தமிழ் திரைப்படங்கள் தயாரிக்காத இவர்கள் மூவரும் பதவி வகிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வக்கீல் தனஞ்செயன் ஆகியோர் வாதிட்டனர்
இதையடுத்து நீதிபதி பொங்கியப்பன்,இவ்வழக்கு முடியும் வரை கவுரவச் செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணனும், பொருளாளராக எஸ்.சந்திரபிரகாசும், துணைத்தலைவராக கதிரேசனும் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.