
நெடுங்காலமாக தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஏவி.எம் .நிறுவனம் ஓடிடி தளத்தில் குதித்திருக்கிறது.அருணா குகன் ,அபராஜிதா குகன் தயாரிப்பில் வெளியாகிஇருக்கிற ஓடிடி தள படம்.!சோனி லைவ் வில் வெளியாகி இருக்கிறது.
தமிழ்ச்சினிமாவை மிரட்டிக் கொண்டிருக்கும் தமிழ் ராக்கர்ஸை மையமாக வைத்து துணிச்சலான படத்தை எடுத்திருக்கிறார்கள் .இதற்காக பாராட்டியாகவேண்டும்.
இதுமட்டுமில்லை கதையின் நாயகனே தளபதி விஜய்தான்.! நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகிற கேரக்டர்.அதிரடி ஸ்டார் சாட்சாத் விஜய்யேதான்.!
தீபாவளிக்கு அதிரடி ஸ்டாரின் படம் ரிலீஸ். தீபாவளிக்கு முன்னதாகவே அந்த படத்தை ரிலீஸ் செய்வோம் என்கிற சவாலுடன் தமிழ் ராக்கர்ஸ்.
” பார்ப்பம்டா அதையும் .! தடுத்து நிறுத்துவோம் “என்கிற முனைப்புடன் போலீஸ் அதிகாரி அருண் விஜய் .மற்றும் குழுவினர்.
தமிழ் ராக்கர்ஸை ஒன்றுமே செய்ய முடியாது என்கிற முடிவுக்கு ஏன் வருகிறார்கள் என்பதை வலியுடன் உண்மைகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
பிரபல தயாரிப்பாளர் அழகம்பெருமாள் .300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தீபாவளி ரிலீசுக்கு படம் தயாரிக்கிறார். அதிரடி ஸ்டாரை புகழ்ந்து பேசியே காரியத்தை முடித்துக்கொள்கிற பக்கா காரியவாதி. அதிரடி ஸ்டாரின் அப்பாவிடம் (எஸ்.ஏ.சி. யா?) குழைவதும்,புகழ்வதும் ரொம்பபேர் இப்படி சினிமாவில் இருக்கிறார்கள் . அப்பா காட்டுகிற பந்தா ..அடடே ரகம்.தம்பியிடம் 28 வருசமாக இருந்த உதவியாளரை ஒரு நொடியில் ஒரு மாத சம்பளத்துடன் வெட்டி விடுகிறார்களே அவர் யார் பி.டி.செல்வகுமாரா?
மதுரை பைனான்சியரையும் காட்டுகிறார்கள். பல உண்மையான கேரக்டர்களை முகமூடி போட்டு இறக்கியிருந்தாலும் அவர்கள் யார் என்பது சினிமாவை சேர்ந்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.
கதாநாயக நடிகர்களின் விளம்பர மோகம் ,போட்டி நடிகர்களை மட்டம் தட்டும் வகையில் நாயக நடிகர் தனது ரசிகர்களுக்கு அளிக்கிற பிரியாணி விருந்து தளபதி நடிகரை நினைவு படுத்துகிறது.
இப்படி சினிமாவின் ரகசிய பக்கத்தை வெட்டவெளிக்கு கொண்டுவந்தவர், அருண் விஜய்யை வைத்து தனிக்கதை பண்ணி அதை சாமர்த்தியமாக சேர்த்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். காதலி ஐஸ்வர்ய லெட்சுமியை இழந்த சோகத்தில் காவல் துறை அருண் விஜய்.நன்றாக நடித்திருக்கிறார். என்றாலும் “உன்னையே எண்ணிப்பார்” என்கிற நிலையில் சில காட்சிகள் இருக்கின்றன.. சினிமாவினால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.பாஸ்கரின் (சூப்பர்.) மகளாக வாணி போஜன். அந்த காலத்து ஸ்ரீ ரஞ்சனியை நினைவு படுத்துகிறார். சோகம் கப்பிய முகம்.!
தயாரிப்பாளராக வருகிற அழகம் பெருமாள் அசல் ரகம்.முன்னணி நடிகர்களிடம்,அவர்களின் தாய் தந்தைகளிடம் தயாரிப்பாளர்கள் எப்படியெல்லாம் அடிபடுகிறார்கள் என்பதை அசலாக பிரதிபலித்திருக்கிறார்.இந்த கதைக்கு வசனம் எழுதியவர்களை பொன்னாடை போர்த்தி கவுரவிக்கலாம். பல இடங்களில் ‘நடையனை’வைத்து அடித்திருக்கிறார்கள்.
தமிழ் ராக்கர்ஸுக்கு எப்படியெல்லாம் உதவிகள் வருகின்றன ,சட்டங்களில் உள்ள ஓட்டைகள் எப்படியெல்லாம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, என்னென்ன தேவைகள் அந்த துறைக்கு அவசியமாகிறது என்பதையும் துணிவுடன் சொல்லியிருக்கிறார்கள்.
ரசிகர்களின் மனநிலையை தமிழ்ராக்கர்ஸ் வெளிப்படுத்திய அளவுக்கு வேறு படங்களில் காட்டியதில்லை.ரசிகர்களாக நடித்தவர்கள் சிறந்த நடிகர்களாக வர வாய்ப்பு இருக்கிறது.
பாருங்கள்.திரைப்பட உலகுக்கு ஏழரையாக இருக்கிற தமிழ் ராக்கர்ஸை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.












