கடந்த மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சுதிப்தோ சென் இயக்கிய இப் படத்தில், கேரளாவில் 32 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும், அதன்பின்னர் அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் காட்டப்பட்டது. மேலும், அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளில் உள்ளவர்களுக்கு பாலியல் அடிமைகளாக விற்கப்படுவதாகவும் சித்தரித்து இருந்தார்.
அந்தப் படத்தின் கருத்தியலுக்கு எதிராக ஏஆர் ரஹ்மான் உட்பட பலரும் கண்டனக் குரல் எழுப்பினர்.இந்தப் படத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது ஏஆர் ரஹ்மான் கேரளாவில் உள்ள மசூதியில் இந்து சமூகத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்ட வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்து,“மனிதகுலம் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும் குணமாக்குவதாகவும் இருக்க வேண்டும்” எனும் கருத்தையும் பதிவிட்டு இருந்தார். அது ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தொடங்கி சமூக வலைதளவாசிகள் வரை பலரும் இந்தப் படத்துக்கு எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், மேற்கு வங்கத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாததால் 2 நாள்களில் இப்படம் இனி திரையிடப்பட மாட்டாது என மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அறிவித்தன.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி இயக்குநர் சுதிப்தோ சென்னுடன் அவரது அடுத்தப்படமான ‘சகாராஸ்ரீ” படத்துக்காக ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக இணைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும், இசையமைப்பாளர் ஏ.ஆர், ரஹ்மான் மீது அபரிமிதமான மரியாதை இருந்தாலும், அப்பட்டமான மதவெறுப்பை பரப்பும் திரைப்படத்தை இயக்கிய சுதிப்போ சென் உடன் ஏஆர் ரஹ்மான் இணையக்கூடாது, ரஹ்மானுக்கு பணம் தான் ஒரே நோக்கமா என்றும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்
இந்நிலையில் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே கமிட் ஆகி விட்டதாகவும் ரஹ்மான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.












