மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்.
இயக்குநர் அட்லி பாலிவுட்டில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிற படம். ஒன்றிய அரசை தைரியமுடன் விளாசியிருக்கிறார் . பாலிவுட் சூப்பர் ஸ்டாரும் வருவது வரட்டும் என பேசி அனல் கக்கியிருக்கிறார். எல்லாம் சரி வழக்கம்போல அட்லி ‘கை ‘வரிசை காட்டியிருக்கிறாரா ,இல்லையா? படத்தை பார்த்து விட்டு நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள் .!
படம் எப்படி?
தொடக்கமே மெட்ரோ ரயில் பைட் அதகளம் . மிரட்டல். படம் முழுவதும் அட்லியின் கைதான் ஓங்கி இருக்கும் என்பது புரிந்து விடுகிறது.கதையை பற்றிய கவலை இல்லாமல் காட்சிகள் வழியே அவர்கள் காட்டியிருக்கும் பிரமாண்டம் ,கருத்துகளை சொல்லிவிடுகிறது .ராணுவத்துக்கு வாங்கிய ஆயுதங்களில் நடந்த மெகா ஊழல் ,விவசாயிகளுக்கு வழங்கிய டிராக்டர் அடாவடி வசூல் ,பரிதாப சாவு, மருத்துவ மனையில் கொத்தாக செத்த கொடூரம் என வட மாநில கோரங்களை முறைப்படுத்தி கதை அமைந்திருக்கிறது.
இரண்டு ஷாருக் கான் .நடிப்பில் வேறுபாடு,காட்டி அந்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் . தற்போதைய படங்களில் குரூப் டான்சில் விறுவிருப்பும் வித்தியாசமும் காட்டி கவருவதைப்போல இந்த படத்திலும் ஷாருக் டான்ஸ் காவாலா டைப்பில் கவர்கிறது.
ராணுவ ஆயுத டீலராக விஜய் சேதுபதி.யாரையோ பிரதிபலிக்கிறார் இந்த நடிப்பு ராட்சசன் .
நாயகிகளாக நயன்தாரா ,தீபிகா படுகோன் . முக்கிய வேடம் ஒன்றில் பிரியாமணி. இந்த மூவரில் தீபிகா மின்னுகிறார் . சோகத்தை பிரியாமணி பிழிந்திருக்கிறார் .
நயன் ,யோகிபாபு ஆகியோர் கரை ஒதுங்கிய கேரக்டர்கள் மாதிரி ஆகி விட்டனர். நயனின் கேரக்டர் கமல் பட பாதிப்பு.
இசை அனிருத் . பின்னணி சூப்பர். பாடல்கள் சுமார்.
படம் பிரமாண்டமாக காட்சிப் படுத்தப் பட்டிருப்பதற்கு ஒளிப்பதிவாளர் ஜி. கே . விஷ்ணு. முதல் காரணம். ஆணி வேராக இருக்கிறார் . கேமரா ஜாலத்தினால் தவறுகள் மறைந்து போகின்றன .
இயக்குநர் ஷங்கரின் மாணவர் அட்லி பாலிவுட்டில் ஜவான் ஆகி இருக்கிறார்.