‘கார் மேனி செல்வம்’, இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார், ராம் சக்ரி. இதில் சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா, சிறுவன் கரன் சக்கரவர்த்தி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டம், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா, ஜெயந்தி, பேபி கே லயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கௌதம் வாசுதேவ் மேனனிடம் கார் டிரைவராக வேலை பார்த்துவரும் சமுத்திரக்கனி, மனைவி லட்சுமி பிரியா, மகன் கரன் சக்கரவர்த்தி ஆகியோருடன் எளிமையான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். நாளடைவில் பணத்தேவைகள் அதிகரித்து கொண்டே போவதோடு, சமுத்திரக்கனி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க நினைக்கிறார். இதன் காரணமாக தெரிந்தவர்களிடம் கடன், கிரடிட் கார்டு என செல்வு செய்த வகையில் கடன் காரர்களுக்கு பயந்து, மறைந்து வாழும் சூழல் உருவாகிறது. குடும்பத்தின் எளிமையான, சந்தோசமான வாழ்க்கை பறிபோகிறது. அவர்களின் சந்தோஷமான வாழ்க்கை திரும்பக் கிடைத்ததா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே ‘கார்மேனி செல்வம்’.
நேர்மையான கார் டிரைவர், அப்பாவி ‘செல்வம்’ என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. எந்த காட்சியிலும் கதாபாத்திரத்தை விட்டு வெளியேறிவிடாத காட்சிகளுக்கேற்ற நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில், படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்து விடுகிறார். இது அவரது நடிப்பிற்கான வெகுமதி. சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா, சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்துகிறார். இவர்களின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்ரவர்த்தியும் தன்னால் முடிந்த குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படம் ஆரம்பத்திலும், முடிவிலும் காட்சி தருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அவரது பெருந்தன்மையான பேச்சும், சமுத்திரக்கனியிடம் காட்டும் பரிவும், சூழ்நிலையை உணரும் தருணத்தினையும் சிறப்பாக நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி, அனைவரையும் ஆட்கொண்டு விடுகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயாவும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். இவர்களுடன் படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டம், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா, ஜெயந்தி ஆகியோரும் கதாபாத்திரங்களாக கவனம் பெறுகின்றனர்.
ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவும், மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜியின் (Musicloud Studio & Technology) இசையும் படத்தின் பலமாக அமைந்திருக்கிறது.
லாஜிக்கில்லாத காட்சிகளும், நாடகத்தனமான, மெதுவாக செல்லும் திரைக்கதையும் படத்தின் பலவீனமாக இருக்கிறது.
அத்தியாவசியமானவற்றை விடுத்து, தேவையற்றதை தேடிச்செல்லும்போது, தேவையானது தொலைந்து போகும். எனும் கருத்தை சொன்ன விதத்தில் இயக்குநரை பாராட்டலாம். அதேசமயம், வெளிநாடு சென்று வேலை செய்பவர்களை குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம்? எனத்தெரியவில்லை!
‘கார் மேனி செல்வம்’ – தவறான கருத்தை சொல்லும் படம்!












