
கதை,இயக்கம் :சாந்தகுமார், ஒளிப்பதிவு :அருண் பத்மநாபன், இசை ; எஸ்.தமன் ,தயாரிப்பு: ஞானவேல்ராஜா ஸ்டுடியோ கிரீன் .வெளியிடுபவர் : தருண் பிக்சர்ஸ்.
ஆர்யா,இந்துஜா, மகிமா நம்பியார்,ஜெயபிரகாஷ், இளவரசு,தீபா, ரோகிணி,
*************
இயக்குநர் சாந்தகுமாரின் எட்டாண்டு உழைப்பு–
ஆர்யாவை முழுமையாக மாற்றி இருக்கிறது. இந்துஜா, மகிமாவை வேறு பரிமாணத்தில் காட்டி இருக்கிறது. வழக்கமான காதலைக் காட்டாமல் உண்மையான அன்பின் அழுத்தத்தைப் பதிவு செய்திருக்கிறது. அரசியல்வாதிகளின் பலமுகங்களைப் பார்த்து விட்ட நமக்கு இன்னும் சில முகங்களும் தெரிகிறது.
வித்தியாசமான பாதையில் பயணிக்கும் திரைக்கதையில் மகா-முனி என்கிற இரு கேரக்டர்களை அறிமுகம் செய்திருக்கிற விதமே கை தட்ட வைக்கிறது. அவர்கள் இரட்டையர்கள்தான் என்பது ஆடியன்சுக்கு புரிந்தால் போதும் என இயக்குநர் முடிவு செய்து விட்டுதான் காட்சிகளை அமைத்திருக்கிறார். அனாவசியமான பில்ட் அப்கள் தவிர்த்து கிளைமாக்சும் இயல்பாக முடிகிறது.
வழக்கமான ஆர்யாவை எந்த போதி மரத்தில் ஒழித்து வைத்திருக்கிறாரோ இயக்குநர்.! அவரிடம் மசாலா நெடியில்லை, பெண்ணின் கழுத்தினை முகர்ந்து பார்க்கும் காமம் இல்லை .சேட்டைகள் இல்லை. நடிப்பை மட்டும் தவமாக மேற்கொண்டிருக்கிறார். ரசிகர்களை கண் கலங்க வைக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
நம்பித்தான் ஆகவேண்டும்.! இரண்டு ஆர்யாக்களில் யாருக்கு பரிசு? ஆடியன்ஸ்தான் முடிவு சொல்லவேண்டும். அமைதியாக ,சாதாரண வேட்டி,நெற்றியில் விபூதி கீற்று…முனி பெஸ்ட்!
ஆர்யாவின் மனைவியாக இந்துஜா.
சாதாரண அடியாளின் மனைவி.ஒரு பையனுக்கு தாய். பார்க்க ,பாவமாக,பாந்தமாக இருக்கிறார். ஆர்யா பிடிபட்டதும் இந்துஜா படும்பாடு கணவன் மீதான பாசத்தை வெளிப்படுத்துகிறது.
மகிமா நம்பியாரின் ஜர்னலிசம் ஆய்வும் அவரது அறையில் இருக்கும் பெரியார் இன்னும் சிலரின் படங்கள் அவரது கேரக்டரின் வலிமையை உணர்த்தி விடுகிறது. தன்னம்பிக்கை,அச்சமின்மை,போர்க்குணம். அருமை.
இளவரசுக்கு வழக்கமான வேடம்தான் என்றாலும் போதை மன்னனை மறக்க முடியவில்லை.
மகா மக்கு இல்லை. முனி விவரமான ஆள். தத்துவங்களை கரைத்துக் குடித்த அறிவாளி.
ஆனால் இவர்கள் இருவருக்கும் இளவரசு , ஜெயபிரகாஷ் இருவரின் கபடவேடம் ,திட்டம் பற்றி கொஞ்சம் கூட சந்தேகம் வரவில்லை என்பது ஜீரணிக்க முடியவில்லை.
இந்த படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் வசனங்கள் ! இதற்காகவே இன்னொரு தடவை படத்தைப் பார்க்கலாம்.கடவுள் பற்றிய புரிதல் பற்றி ஆர்யா சொல்லுகிற விளக்கம் சூப்பர்.
அருண் பத்மநாபனின் முதல் படமாம் இது. ஒளிப்பதிவைப் பார்த்தால் அப்படி சொல்ல முடியவில்லை.
சினிமா முரசத்தின் மார்க்: 4 / 5












