
கதை,இயக்கம் :லோகேஷ் கனகராஜ். வசனம்.பொன் .பார்த்திபன் , லோகேஷ் கனகராஜ்,ஒளிப்பதிவு:சத்தியன் சூர்யன்.( சூப்பர்.) இசை: சாம்.சி.எஸ். தயாரிப்பாளர்கள்.:எஸ்,ஆர்.பிரபு எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ,திருப்பூர் பிரபு.
கார்த்தி,நரேன் ,பேபி மோனிகா ,தீனா,( நல்லாவருவே.) ஜார்ஜ் மரியம்,ஹரிஷ் உத்தமன்,ரமணா,
******************
என்னடா ஒரே ராத்திரியில் நடக்கிற கதைன்னு சொல்றாங்க, ஹீரோயின் வேற இல்லையாம், பாட்டும் இல்லைன்னு வேற சொல்றாங்க. ஆக்ஷன் பிலிம்ன்னு அடிச்சு சொல்றாங்க ,எப்படி இருக்குமோ ?
இத்தகைய கேள்விகளுடன் தியேட்டருக்குள் உட்கார்ந்தால் …?
லோகேஷ் கனகராஜும் கார்த்தியும் இணைந்து இமைகளை மூட விடவில்லை.
கதை ஒன்றும் பிரம்மன் படைத்ததில்லை . அடுத்தவன் பெத்த பிள்ளைக்கு இவர்களின் இனிஷியலை போட்டுக்கொண்டு கெத்துக் காட்டவும் இல்லை.
மிகப்பெரிய போதை பொருள் வேட்டை. சும்மா ஸ்டேட்டே அதிர்சசிஅடையும் அளவுக்கு பெரிய வேட்டை. அதிகாரிகள் கொண்டாடுகிறார்கள். மகிழ்சசியின் உச் சம் என்றால் உற்சாக பானம் இல்லாமல் இருக்குமா?மிக்சிங்கில் கலப்படம் அதை யார் செய்திருப்பார்கள். ?மிகப்பெரிய அதிகாரியே ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடப்பது தெரிந்தால் அவமானம் ஸ்டேட்டையும் தாண்டி விடுமே .எத்தனையோ அரசியல் அவமானங்கள் ‘அவார்டு ‘வாங்கினாலும் நம்ம போலீஸ் துறைக்கு கேவலம் இல்லையா என வருந்துகின்ற நரேன் விடிவதற்குள் மருத்துவமனையில் சேர்த்து விடவேண்டும் என்கிற துடிப்புடன் ஒரு லாரியில் அவர்களை தூக்கிப் போடுகிறார். லாரி டிரைவராக கைதி கார்த்தி. விலங்கைக் கூட அகற்றாமல் கூட்டி செல்லுகிறார். கூடவே ஒரு இளைஞன் ,நல்லா வருவான் அந்த வாலிபன்.இயல்பான நடிப்பு.
போதைப் பொருளை மீட்க ஒரு கூட்டம் திருச்சி கமிஷனர் ஆபிசை முற்றுகையிட்டு சரக்கையும் தங்களின் ஆட்களையும் மீட்க திட்ட மிடுகிறது. மயக்கமானவர்களில் தங்களின் ஆட்களும் கிடப்பதால் இன்னொரு கும்பல் லாரியை மடக்க முயற்சிக்கிறது..
அநாதை ஆசிரமத்தில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக நரேனின் திட்டத்துக்கு ஒப்புக் கொண்ட கார்த்தியின் திட்டம் என்ன ஆகிறது? கமிஷனர் ஆபீஸ் முற்றுகை முடிவு என்ன என்பதெல்லாம் இயக்குனர் முடிவுப்படியே நடந்தாலும் தொடக்கம் முதல் முடிவு வரை நம் நாடித் துடிப்பினை ஏற்றத்திலேயே வைக்க வேண்டுமா. கிளைமாக்ஸ் காட் சியில் கண் கலங்காமல் வரமுடியவில்லை.
வெல்டன் கார்த்தி. அழுக்குசட்டை . கலர் வேட்டி ,கை விலங்கு என படம் முழுவதும் வந்தாலும் எவரது சாயலும் இல்லாமல் சொந்த சரக்குதான் !பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு விடுகிறார். மக்களை பற்றிய ஏக்கம், குரலை மட்டுமே கேட்ட மகளை நேரில் பார்க்க போகிறோம் என்கிற மகிழ்ச்சி ,ஆனாலும் பிழைப்போமா என்கிற அளவுக்கு பிரச்சனைகள். சிறுத்தையே என்றாலும் கழுதைப் புலிகளின் கூட்டத்தில் மாட்டி கொண்டால் என்னவாகும்?தாய்மையின் பாசத்துடன் போரிடும் வலிமை. சூப்பர் கார்த்தி.! வித்தியாசமான கேரக்டர். முன்னணி நடிகர்களே தயங்குவார்கள் . பஞ்ச் டயலாக்கும் இல்லை.தன்னை உயர்த்திப் பாடுகிற பாடல் வரிகளும் இல்லை. கட்டிப்பிடித்து போதை ஏற்றுகிற காதலும் இல்லை.எப்படிய்யா ஒத்துக்கொண்டே மகராசா !
நரேனின் கடமை உணர்ச்சி ஜார்ஜ் மரியத்தின் தைரியம் இவையெல்லாம் நெஞ்சுக்குள் அமர்ந்து விட்ட காட்சிகள். அந்த லாரிக்கார உரிமையாளர் பையன் நல்ல தேர்வு. அது அடிபடும்போதெல்லாம் அவன் படும்பாடு இயற்கை
இரவுக்காடசிகளை எடுப்பதென்பது பார்ப்பவர்களுக்கு எளிதாக தெரியலாம் .ஆனால் அவைகளை அப்படியே திரைக்கு கொண்டுவருவது என்பது தனி திறமை.சத்யன் சூரியனுக்கு பாராட்டுக்கள்.
வி எப் எக்ஸ் வேலைகள் எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு பயன் பட்டிருக்கின்றன.
நெருடல் இல்லாமலும் இல்லை. ஒரு கமிஷனர் ஆபீஸ் அவ்வளவு முரட்டுத்தனமாக முற்றுகை இடப்படுவது மக்களுக்கும் மீடியாக்களுக்கும் தெரியாமல் போகுமா?
ஆனாலும் படம் போன வேகத்தில் ஒன்றும் தெரியவில்லை. வாழ்த்துக்கள்.
சினிமா முரசத்தின் மார்க் : 4 / 5












