‘ஸ்வப்னா சினிமா’ மற்றும் ‘வைஜெயந்தி பிலிம்ஸ்’ சார்பில் நாக் அஸ்வின் தயாரித்து, சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரிப்படம், சிங் கீதம். இதில் அகில்யா பம்ரூ, அயான், ஷாலினி கொண்டெபுடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன்துளசி, மகேஷ் அச்சந்தா, வம்ஷிதர்கவுடு, சிவநாராயணா, பானர்ஜி, ஸ்ரீமுக்தா மச்சா, ரச்சார ரவி, யோகி காத்ரி, ஜூனியர் ரேலங்கி, ஆனந்த்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்க, சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார், விஜய் தேவரகொண்டா.
அங்கூர் சஞ்சீவ் ஒளிப்பதிவு செய்திருக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
மோசடியில் ஈடுபட்டதற்காக சிறை சென்று திரும்பும் நாயகன் அயானுக்கு 1000 ஏக்கர் நிலம் உள்ள சொத்துபத்திரம் கிடைக்கிறது. அதை எடுத்துக்கொண்டு நிலம் இருக்கும் ஊருக்கு செல்கிறார். அந்த நிலம் பள்ளமும் பாறைகளுமாக வறண்டு கிடக்கிறது. தங்கம் எடுப்பதற்காக தோண்டப்பட்ட சுரங்கங்கள் தான் அவை. என அவருக்கு பின்னர் தெரிய வருகிறது. அந்த நிலம் தனக்கு சொந்தம் என இன்னொருவர் உரிமை கோருகிறார். ஒரு சுரங்கத்தை நம்பி இன்னொரு கும்பல் தங்கம் எடுக்க முயற்சிக்கிறது. அயான் அவர்களை தன்வசம் ஆக்கிக்கொண்டு தங்கத்தை எடுக்க முயற்சிக்கிறார். அந்த ஊரில் உள்ள காடுகள் எல்லாம் அழிந்த நிலையில் ஒரு மரம் மட்டும் மிச்சமிருக்கிறது. அதை வெடி அந்த இடத்தில் சுரங்க தோண்ட முயற்சிக்கின்றனர். அப்போது நில நடுக்கம் ஏற்படுகிறது. அதனைத்தொடர்ந்து அங்கிருக்கும் மக்கள் அனைவருக்கும் பேசும் திறன் பாடும் திறனாக மாறுகிறது. இதை குபேரனின் சாபமாக மக்கள் கருதுகின்றனர். தொடர்ட்ந்து அயானுக்கு சில சம்பவங்கள் நடக்கிறது. அது என்ன தங்கம் கிடைத்ததா? பேசும் திறன் வந்ததா? என்பது தான் சிங் கீதம் படத்தின் ஃபேன்டசி கதை.
கமல்ஹாசன் நடித்த ‘பேசும் படம்’ மூலம் இந்திய திரையுலகினரை மூச்சிரைக்க பேச்வைத்தவர், இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். அவரது வித்தியாசமான கதைக்கருவின் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு படத்தினை பக்காவான சினிமா பாணியில் கொடுத்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அயான், கலகலப்பான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். அம்மா சென்டிமென்ட் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.
இயற்கையை காப்பாற்ற பாடுபடும் கதாபாத்திரத்தில் போராளிப்பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார், அஹல்யா பம்ரூ.
தங்க சுரங்கத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபூடி, சைலஜம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சிவ நாராயணா உள்ளிட்டவர்கள் அந்தந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைக்கிறார்கள். க்ளைமாக்ஸில் விஜய் தேவரகொண்டா நடித்த காட்சி சிறப்பு.
ஒளிப்பதிவாளர் அங்கூர்.சி, காட்சிகளை நன்றாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.
கலை இயக்குநர் அரவிந்த் மூலே பாராட்டுக்குரியவர். எது நிஜம். எது பொய் என தெரியாத அளவில் அரங்க வடிவமைப்பினை செய்திருக்கிறார். வி எஃக்ட்ஸ் டீமும் பாராட்டுக்குரியது.
உரையாடல்களை பாடல் மூலமாக இடம்பெறச்செய்யும் வித்தியாசமான முயற்சி வெற்றி பெற்றதாகத்தான் சொல்ல வேண்டும். முடிந்தவரை காமெடிக்காட்சிகள் மூலம் திரைக்கதையை சுவாரசியமாக நகர்த்திச்செல்கிறார் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.
மொத்தத்தில், ‘சிங் கீதம்’ இயற்கையை நேசிக்க வைக்கும் வித்தியாசமான முயற்சி.












