
அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அதிமுக அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்திருந்தது.
கூட்டணியாக நின்ற அதிமுகவும் தேமுதிகவும் இடைக்காலத்தில் நடந்த குளறுபடிகளால் தனித் தனியாக கழண்டு கொண்டன. ஒருவரையொருவர் ஏசிப் பேசுவது அரசியலாகி விட்டது.
2012 ஆம் ஆண்டு தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினார் என்று தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பினர் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு செய்தார்.
மனுவை திரும்பப்பெறுவதாக விஜயகாந்த் தரப்பு சொன்னதற்கு ஏ.பி.ஷாகி, சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்தது.
இத்தனை ஆண்டுகளாக நடந்த வழக்கை இப்போது திரும்பப்பெறுவது என்பது நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகும் என கண்டித்தார்கள். இதற்காக அபராதம் விதிக்கலாம் என்றும் சொன்னார்கள். விஜயகாந்த் பேசியது அவதூறுதான் .அரசியல் பற்றி விவாதிக்க இது இடமில்லை என்பதால் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். விஜயகாந்த் தரப்பு வக்கீல் மன்னிப்புக் கேட்டதால் அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம் என்று அமர்வு நீதிபதிகள் கூறினார்கள்.












